உங்க விஜய்.. பொய் வாக்குறுதி தர மாட்டேன்! சொன்னதை நிச்சயம் செய்வேன்! முதலமைச்சராக முதல் உரை!
சென்னை: தமிழகத்தில் புதிய அரசை உருவாக்கி இருக்கும் 'தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்' தனது முதல் உரையை ஆற்றினார். அதில் பொய் வாக்குறுதிகளை தான் எப்போதும் தருவது கிடையாது என்றும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சி ஜோசப் விஜய் எனும் நான் எனக் கூறி தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார் விஜய்.
தொடர்ந்து அவருடன் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். விஜய் பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மேடையிலேயே 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், சிங்கப்பெண் பாதுகாப்பு படை, போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு படை ஆகியவற்றுக்கு கையெழுத்திட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய்,"சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றிருந்த ஒரு சாதாரணமான உதவி இயக்குநருக்குப் பிறந்த ஒரு பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமையில் என்னவென்பது தெரியும், பசி என்றால் என்னவென்பதும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களை மாதிரிதான், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான், உங்கள் பிள்ளை மாதிரிதான், உங்கள் அண்ணன் - தம்பி மாதிரிதான் நான் உணர்கிறேன்.
நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான், சினிமாவில் மிகப் பெரிய இடத்தை எனக்குக் கொடுத்தீர்கள். இப்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை நீ வா விஜய் பார்த்துக் கொள்வோம்' என்று சொல்லி, அவ்வளவு அன்பாகவும் அவ்வளவு உறவாகவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
ஆட்சிக்கு வந்ததும் நான் சொன்ன அனைத்தும் நிறைவேற்றப்படும். மற்றவர்களைப் போல பொய் வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன். சொல்லாதவற்றையும் செய்வேன். சாத்தியம் இல்லாதவற்றை செய்ய முடியாது என்றால் நான் அதை சொல்லவே மாட்டேன். ஆனால் நான் சொன்ன விஷயங்களை நிச்சயம் செய்வேன். ஆனால் அதற்கு கொஞ்சம் நீங்கள் அவகாசம் தர வேண்டும். இங்கே என்ன எப்படி இருக்கிறது என தெரியவில்லை. அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டு நிச்சயம் உங்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்" என்றார்.














Click it and Unblock the Notifications