Vijay: 5 நாள் பலப்பரீட்சை.. கடைசியில் விஜய்-க்கு கிடைத்தது இதுதான்?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு 5 நாட்கள் நீடித்த அரசியல் பரபரப்பு, கட்சிகளுக்கிடையேயான தீவிர பேச்சுவார்த்தைகள் மற்றும் பெரும்பான்மை ஆதரவைப் பெற நடந்த கடும் முயற்சிகளுக்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை உருவானது.
இந்த அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தேசிய அரசியல் வட்டாரங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் தொடர்ந்தபடியே சில கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவு வழங்கியிருப்பது இந்திய அரசியலில் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆளுநர் அறிவிப்பு மற்றும் பெரும்பான்மை சோதனை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார். அதே நேரத்தில், வரும் 13ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை தெளிவாக அறிவித்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள ஆதரவு சட்ட ரீதியாக போதுமானதாக இருந்தாலும், சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பே விஜய் அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் முழுவதும் தற்போது அந்த தேதியை நோக்கி நகர்கிறது.
விஜய் அரசை காப்பாற்றிய சிறிய கட்சிகள்
விஜய் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றியது "கடைசியாதான் வந்தாரு விநாயக் மகாதேவ்" என்பது போல் கடைசியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு தான் இன்று விஜய் முதல்வராக பதவியேற்க வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த இரு கட்சிகளும் தலா இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், அவர்களின் ஆதரவு விஜயின் பெரும்பான்மை கணக்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த ஆதரவு முழுமையான அரசியல் கூட்டணியாக இல்லை என்பதுதான் தற்போதைய அரசியல் சூழ்நிலையின் தனிச்சிறப்பு. திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவும், மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடி மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க மட்டுமே விஜய்க்கு ஆதரவு அளிப்பதாகவும் அந்த கட்சிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளன.
இதனால், விஜய் தலைமையிலான அரசு உருவாகியிருந்தாலும், அதனை ஆதரிக்கும் சில கட்சிகள் அரசியல் ரீதியாக இன்னும் திமுக அணியிலேயே இருப்பது குறிப்பிடத்தக்க சூழலாக மாறியுள்ளது.
திருமாவளவன் கூறிய விளக்கம்
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக விளக்கினார். திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடி உருவாகக் கூடாது என்பதற்காக மட்டுமே விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், "தவெக RSS-ன் பிள்ளைகள் என்ற விமர்சனத்தில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை" என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தபோதும், அவர்மீது முன்பு வைத்திருந்த விமர்சன நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் இதே நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் அரசு உருவானாலும் அதன் அரசியல் நிலைத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
காங்கிரஸ் கூட்டணி
விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் தவெகவின் 107 எம்எல்ஏக்கள் முக்கிய ஆதாரமாக உள்ளனர். இதனுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களின் ஆதரவும் இணைந்து தற்போது 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.
இதில் முக்கியமாக கவனிக்கப்படுவது காங்கிரஸின் நிலைப்பாடு தான். திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகிய ஒரே கட்சி காங்கிரஸ் என்பதால், அதன் ஆதரவு விஜய்க்கு தற்போது மிகவும் அவசியமானதாக உள்ளது.
ஆனால், பல மாநிலங்களில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையை மீறி செயல்பட்ட சம்பவங்கள் முன்பே இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் திமுகவுக்கும் நீண்டகால அரசியல் தொடர்பு இருப்பதால், இந்த ஆதரவு எதிர்காலத்தில் நிலைத்திருக்குமா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
திமுகவின் அடுத்தகட்ட அரசியல் கணக்கு
விஜய் ஆட்சியை உடனடியாக கவிழ்க்க முயற்சித்தால், அது பொதுமக்களிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை திமுக நன்கு புரிந்துகொண்டுள்ளது. குறிப்பாக, தேர்தலுக்கு பிறகு புதிய அரசை மக்கள் ஒரு வாய்ப்பாக பார்க்கும் சூழலில், உடனடி அரசியல் தாக்குதல் பொதுமக்களின் அனுதாபத்தை விஜய்க்கு அதிகரிக்கச் செய்யலாம்.
அதனால், தற்போதைக்கு திமுக அமைதியான அரசியல் அணுகுமுறையை பின்பற்றும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால் சரியான அரசியல் தருணம் கிடைக்கும் போது கூட்டணி பலவீனங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திமுக முயற்சி செய்யலாம்.
இதனால், விஜய் அரசை ஆதரிக்கும் கட்சிகளே ஒருபுறம் திமுகவுடன் அரசியல் தொடர்பைத் தொடர்வது தவெகவுக்கு கூடுதல் சவாலாக மாறியுள்ளது.
5 நாளில் விஜய் கற்றுக்கொண்டது என்ன
இந்த அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், விஜய்க்கு கடந்த சில நாட்கள் முக்கியமான அரசியல் அனுபவமாக அமைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் ஆதரவை பெறுவது ஒரு நிலை என்றாலும், ஆட்சியை அமைப்பது முற்றிலும் வேறுபட்ட அரசியல் கணக்கீடு என்பதை அவர் நேரடியாக உணர்ந்துள்ளார்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆளுநர் மாளிகை கதவுகளை கிட்டத்தட்ட 4 முறை தட்டியுள்ளார் விஜய். இதன் மூலம், உண்மையான அதிகார அரசியல் எவ்வாறு இயங்குகிறது என்பதை விஜய் தற்போது நேரடியாக அனுபவித்துள்ளார்.
ஒரு அரசை அமைப்பதே இவ்வளவு சிக்கலானதாக இருந்தால், அதை நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்வது இன்னும் பெரிய சவாலாக இருக்கும் என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஜய் மாற வேண்டிய கட்டாயம்
திரை உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்த விஜய், தற்போது நிர்வாகத் தலைவராக தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வந்துள்ளார். மக்கள் அவருக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ள நிலையில், அந்த ஆதரவை நிலைநிறுத்துவது இனி அவரது ஆட்சித் திறமையைப் பொறுத்தே அமையும். இதை தாண்டி விஜய் அளித்த வாக்குறுதிகள் எப்படி செயல்படுத்தப்போகிறார் என்பதும் முக்கியமானதாக பார்க்கப்படும்.















Click it and Unblock the Notifications