ராணிப்பேட்டை தாஹிரா ஞாபகமிருக்கா? வெற்றி பெற்றும் அமைச்சராகாதது ஏன்? விஜய் போட்ட பலமான ஸ்கெட்ச்
சென்னை: முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது என்றாலும் சரி, மும்மொழிக் கொள்கை கொண்டு வர கையெழுத்து போட மாட்டோம் என்று உறுதியாக நின்றார்.. ஆனால், இப்போது பொறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை வெங்கட்ராமன், மும்மொழி கொள்கை விஷயத்தில் என்ன செய்ய போகிறார்? என்று பிரபல எழுத்தாளர் புதுமடம் ஹலீம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.. அப்போது 9 பேர் அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்..

இதில் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான புதுமடம் ஹலீம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், தமிழக அமைச்சரவையின் முக்கியமான துறைகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன மற்றும் சீனியர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா என்பது குறித்த ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. .
தவெக அமைச்சரவை
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவுப் பாலம் மற்றும் இந்த அரசு மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட விரும்புவதையே பதவியேற்பு விழாவில் நடந்த நிகழ்வுகள் மற்றும் சில அமைச்சர்களின் தேர்வு காட்டுவதாக அந்த பேட்டியில் ஹலீம் குறிப்பிடுகிறார்.
விஜய் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன் பெரியார் திடலுக்குச் சென்று வீரமணியைச் சந்திப்பு ஒருபுறம், பெரியாரியக் கொள்கை என்று கூறிக்கொண்டு, அதற்கு எதிரான கருத்துடையவர்களைப் பக்கத்தில் வைத்திருப்பது எந்த மாதிரியான ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்.
சிடி நிர்மல்குமார் யார்
jeeva today என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஹலீம், "9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது.. அந்த 9 பேர் யார் என்பது உங்களுடைய விருப்பம்.. அது முதல்வர் சார்ந்த அதிகாரம் என்பதால் அதற்குள் போக தேவையில்லை. ஆனால், அதில் 3 பேர் கவனிக்கத்தக்கவர்கள்..
முதல் நபர் சிடி நிர்மல்குமார். இவர் தீவிர ஆர்எஸ்எஸ்.. ஆர்எஸ்எஸ் உடையுடன் உள்ள போட்டோக்கள் இன்றும் உள்ளன.. பாஜகவில் ஐடி விங்கில் இருந்தவரும்கூட.. அப்படிப்பட்டவருக்கு சீட் தந்திருக்கிறார்கள்.
மயிலாப்பூர் வெங்கட்ராமன்
அடுத்ததாக, மயிலாப்பூர் வெங்கட்ராமன் பள்ளிக்கல்வித்துறை.. மற்ற கட்சிகள் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தும், ஆனால் தான் அப்படி செய்ய மாட்டேன் என்றார் விஜய். ஆனால், இப்போது மயிலாப்பூரில் வெங்கட்ராமனை நிறுத்தி, அவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கி உள்ளது.
முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது என்றாலும் சரி, மும்மொழிக் கொள்கை கொண்டு வர கையெழுத்து போட மாட்டோம் என்றார்.. ஆனால், இப்போதைய பள்ளிக்கல்வித்துறை வெங்கட்ராமன், மும்மொழி கொள்கை விஷயத்தில் என்ன செய்ய போகிறார்?
அதேபோல, அமைச்சரவையில் பெண்ணுக்கு முக்கியத்துவம் தந்திருப்பது பாராட்டத்தக்கதுதான்.. சிவகாசி தொகுதியை சேர்ந்த சகோதரி கீர்த்தனாவுக்கு தந்துள்ளீர்கள்.. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசினார்.. அதுவும் இந்தியிலேயே பேசினார்.. அவருக்கும் அமைச்சர் பதவி தந்துள்ளார்கள்.
ராணிப்பேட்டை தாஹிரா
ஏன், விஜய்க்காக குரல் கொடுத்த சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி தந்திருக்கலாமே? ராணிப்பேட்டை சாயிரா பானுவுக்கு தந்திருக்க வேண்டியதுதானே? முன்னாள் அமைச்சர் காந்தியையே தோற்கடித்தவராயிற்றே?
ராணிப்பேட்டையில் இஸ்லாமிய சமூகம் பெரும்பான்மையாக உள்ளது.. உருது பேசுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.. சாயிரா உருது பேசக்கூடிய சமுதாயத்தை சேர்ந்தவர்.. ஒரு இளம்பெண்மணி, இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து, பொதுத்தளத்துக்கு வந்து, விஜய்க்காக தேர்தல் பணி செய்துள்ளார்.. இனிமேல் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே" என்றெல்லாம் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications