நடந்தது நடந்து போச்சு.. தவெக தரப்புக்கு தாவிய ஒரே ஒரு அமமுக எம்.எல்.ஏ? சட்டசபையில் பல்டி அடித்த காமராஜ்!
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் 'குதிரை பேர' விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் சட்டப்பேரவையிலேயே தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
17வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் சபாநாயகர் தேர்வு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடந்தன.

இந்த சூழலில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரே எம்.எல்.ஏவான காமராஜின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் பேசிய காமராஜ், "தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும். தமிழக இளைஞர்களும் நாங்களும் விஜய்யை நம்புகிறோம். அவர் நல்லாட்சியை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், தவெக அரசுக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், கடந்த சில நாட்களாக நடந்த அரசியல் சர்ச்சைகள்தான். சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவை நாடியது. அந்த வகையில் அமமுக சார்பில் வெற்றி பெற்ற காமராஜின் ஆதரவும் தவெகவுக்கு முக்கியமாக பார்க்கப்பட்டது.
அப்போது, காமராஜ் ஆதரவு கடிதம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு ஆளுநரிடம் தவெக ஆதரவை சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். காமராஜின் கையெழுத்து போலியாக பயன்படுத்தப்பட்டதாகவும், தவெக தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.
அதோடு, காமராஜை அருகில் வைத்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அதே காமராஜ் சட்டப்பேரவையிலேயே விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு இந்த ஆதரவு தவெக தரப்புக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
மேலும், "சில அரசியல் சூழ்நிலைகளால் கசப்பான சம்பவங்கள் நடந்தது" என்று காமராஜ் கூறியிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தினகரன் தரப்புக்கும், காமராஜ் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. தமிழக அரசியலில் தினமும் புதிய திருப்பங்கள் உருவாகி வரும் நிலையில், அமமுக ஒரே எம்.எல்.ஏவின் இந்த நிலைப்பாடு அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications