‘டூன் புத்தக திருவிழா'.. கார்வாலி - குமாவோனி இலக்கியங்களால் 26 புதிய நூல்கள் வெளியீடு
டேராடூன்: உத்தரகாண்டின் 'டூன் புத்தகத் திருவிழா 2026' பிராந்திய மொழிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் கலாச்சார, இலக்கிய கொண்டாட்டமாக நடைபெறுகிறது. உத்தரகாண்டின் மொழியியல் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில், இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை (NBT), கார்வாலி மற்றும் குமாவோனி மொழிகளில் தலா 13 வீதம், மொத்தம் 26 புதிய தலைப்புகளை வெளியிட்டுள்ளது. இந்நூல்கள், ஏப்ரல் 4 அன்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி-யால் வெளியிடப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் 'டூன் புத்தக திருவிழா 2026' தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான கற்றல் செயல்பாடுகளுடன் நடந்து வருகிறது. பிராந்திய மொழிகள் மீதான தீவிர கவனம் இதன் முக்கிய சிறப்பம்சம். அதேபோல் மொழியியல் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற பயிலரங்கின் அடிப்படையில், குழந்தைகள் இலக்கியம் மற்றும் முக்கிய படைப்புகளை கார்வாலி, குமாவோனி மொழிகளில் தொகுத்து மொழிபெயர்க்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை (NBT)-யின் முயற்சியால் உருவான இந்நூல்கள், உத்தரகாண்ட் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வல்லுநர்களை ஒன்றிணைத்தன.
குறிப்பாக கார்வாலி நூல்கள் "சௌரி-சௌரா ஜன் கிராந்தி கோ நாயோ சபரோ", "நன்னா ஹேரா சகுலா", "உம்மீடை கிரண்", "கெய்தா சாகரா அஜூபா", "ஆத்மி ஆர் சயில் ஆர் ஹவுரி கஹானி" வெளியிடப்பட்டுள்ளன. குமாவோனி நூல்களான "மாட்டி மியர் தேசியே கி", "அபிமானை ஹார்", "பதனை ஜானி கான்", "கட்டு ஷியாமக் அன்சுனி கஹானி", "குலாப் கா தகடு" உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டார்.
இம்மொழிகள் மாநிலத்தின் கலாச்சார அடையாளமாக இருந்தபோதிலும், பொதுப் பதிப்பகங்களில் குறைவாகவே குறிப்பிடப்பட்டன. தாய் மொழிகளில் தரமான வாசிப்பு பொருட்களை வழங்குவதோடு, இளைய தலைமுறையினர் மொழியியல் வேர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்வதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டம் ஒத்துப்போகிறது. பல மொழி கல்வி, தாய்மொழி வழிக் கற்றலை NEP ஊக்குவிக்கிறது. வீட்டில் பேசப்படும் மொழிகளுக்கும், முறையான கல்வியில் பயன்படுத்தப்படும் மொழிகளுக்கும் இடைவெளியைக் குறைத்து, ஆரம்பகால எழுத்தறிவை வலுப்படுத்துகின்றன என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பிராந்திய மொழிபெயர்ப்புகள் உட்பட பல மொழிகளில் கதைகளை வழங்குவதன் மூலம், இம்முயற்சி அணுகல் தன்மையை மேம்படுத்துவதோடு, இந்தியாவின் மாறுபட்ட மொழியியல் கலாச்சாரத்திற்கு மதிப்பையும் வளர்க்கிறது. நூல் வெளியீடுகளுக்கு இணையாக, ஏப்ரல் 5 அன்று தொடங்கிய டூன் இலக்கிய திருவிழா, உரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கான துடிப்பான தளம். நிதிஷ் சேத், குல்ப்ரீத் யாதவ், அகிலேந்திர மிஸ்ரா, ஆச்சார்யா பிரசாந்த், சுபான்ஷு சுக்லா, சதீஷ் துவா உள்ளிட்ட பேச்சாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
திரைப்படம், சமகால இலக்கியம் முதல் தலைமைத்துவம், தேசபக்தி வரையிலான பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இது ஒரு விரிவான கலாச்சார மற்றும் அறிவுசார் அனுபவத்தை வழங்குகிறது. டூன் புத்தகத் திருவிழா, டூன் பள்ளத்தாக்கின் குரல்களைக் கொண்டாடுவதோடு, இந்தியாவின் பன்மொழி இலக்கிய பாரம்பரியத்தின் அடித்தளத்தையும் வலுப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications