புது பைக்கில் 140 கிமீ வேகம்.! அடுத்த நொடி கொடூரம்.. தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல யூடியூபர்
காந்திநகர்: அதிவேகமாக பைக்கை இயக்கி, அதை வீடியோவாக எடுத்துப் பதிவிட்டு வந்த பிரபல யூடியூபர் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார். 2 மாதங்களுக்கு முன்பு வாங்கிய தனது புதிய கேடிஎம் பைக்கை அதிவேகமாக மேம்பாலத்தின் மீது ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில், தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவில் சாலை விதிகளை மீறும் போக்கு கணிசமாக அதிகரித்துவிட்டது. இதுபோல சாலை விதிகளை மீறுவோருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

யூடியூப் பிரபலம்
அங்குச் சூரத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் பிரின்ஸ் படேல். உள்ளூரில் பிரபல யூடியூபரான இவர், "பிகேஆர் பிளாகர்" (PKR Blogger) என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் பைக்கை அதிவேகமாக இயக்கிய நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் உயிரிழந்தார். அவர் தனது பைக்கை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்ற நிலையில், அப்போது ஏற்பட்ட விபத்தில் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கிரேட் லைனர் பாலத்தில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் செல்கிறார். அப்போது எதிர்பாராத வகையில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார். அதிவேகமாக வந்ததால் அவரது பைக் பல நூறு மீட்டருக்கு அப்பால் போய் விழுந்துள்ளது. விபத்தால் அவரது உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு விபத்தின் தாக்கம் இருந்துள்ளது.
ஹெல்மெட் இல்லை
இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிரின்ஸ் ஹெல்மெட் அணியவில்லை என்பது தெரிய வந்தது. பைக்கை அதிவேகமாக இயக்கியதும், ஹெல்மெட் அணியாமல் இருந்ததுமே அவர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
உயிரிழந்த பிரின்ஸின் தாயார் அப்பகுதியில் பால் விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது மகன் உயிரிழந்துவிட்டது குறித்து போலீசார் சொன்னபோது, அதை நம்ப முடியாமல் அந்தத் தாய் கதறி அழுதார். இது பார்ப்போர் நெஞ்சைக் கலங்க வைக்கும் வகையில் இருந்தது.
யார் இவர்!
தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பைக் ரீல்ஸ் போடுபவர் தான் பிரின்ஸ் படேல்.. சாலைகளில் எந்தவொரு தேவையான முன்னெச்சரிக்கை அல்லது பாதுகாப்பு நெறிமுறைகள் இல்லாமல் அதிவேகமாக பைக் ஓட்டுவதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். அதை வீடியோவாக எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் அவர் ரொம்பவே பேமஸாக இருந்தார்.
தனது கேடிஎம் ட்யூக் 390 பைக் மீது அவருக்குத் தனிக் காதல் இருந்துள்ளது. இதை அவரது சமூக வலைத்தளப் பக்கங்களிலேயே பகிர்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தான் பிரின்ஸ் அந்த பைக்கை வாங்கி இருக்கிறார். அதற்கு 'லைலா' எனப் பெயரிட்டு, அதன் படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

4 நாள் முன்னாடி கூட
விபத்து நடப்பதற்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட பிரின்ஸ் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் உயிர் போனாலும் கூட, அதன் பிறகு தனது லைலாவை (பைக்கை) சொர்க்கத்தில் காதலிப்பேன் எனச் சொல்லி இருக்கிறார். அவர் இந்த வீடியோவை பதிவிட்ட 4வது நாள் விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் எப்போதும் பைக் அல்லது கார் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். பைக் ஓட்டும்போது நிச்சயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி நிச்சயம் வாகனங்களை ஓட்டக்கூடாது.












Click it and Unblock the Notifications