"உன் புருஷன் எனக்கு... என் புருஷன் உனக்கு!” சகோதரிகள் கேட்ட "கணவர் எக்ஸ்சேஞ்ச்.." நீதிமன்றமே ஷாக்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வினோதமான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது உடன்பிறந்த சகோதரிகள் இருவர் தங்கள் கணவர்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் சொந்த கணவருடன் வாழப் பிடிக்கவில்லை என்றும் இதனால் கணவர்களை மாற்றிக் கொள்ள விரும்புவதாக அவர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
பொதுவாகப் பழைய பொருட்களைக் கொடுத்துவிட்டுப் புதிய பொருட்களை வாங்கும் 'எக்ஸ்சேஞ்ச்' சலுகைகளைப் பார்த்திருப்போம். ஆனால், குவாலியரில் இரண்டு சகோதரிகள் தங்கள் கணவர்களையே ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள முன்வந்திருப்பதுதான் இப்போது அந்த ஊரின் ஹாட் டாபிக். இந்த விவகாரம் முதலில் ஒரு கடத்தல் வழக்காகத்தான் நீதிமன்றத்திற்கு வந்தது.. நீதிமன்றம் விசாரிக்கும்போதே இது இப்படியொரு வினோத வழக்காக மாறியது.

வாக்குமூலம்
ததியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியையும் மகளையும் தனது மைத்துனர் (சகோதரியின் கணவர்) மாயாராம் என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி, அந்தப் பெண் போலீசார் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், அவர் அளித்த வாக்குமூலம் மனுதாரருக்குப் பேரிடியாக அமைந்தது.
அதாவது அந்த பெண், "நான் கடத்தப்படவில்லை. என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் மாயாராமுடன் வாழ்கிறேன். ஏற்கனவே என் கணவரிடம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளேன்" என அந்தப் பெண் அதிரடியாகத் தெரிவித்தார். அதாவது சொந்த கணவர் வேண்டாம்.. சகோதரியின் கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன் என அந்த பெண் கூறியிருக்கிறார்.
அதிர வைத்த சகோதரி
மாயாராமின் மனைவியும் (அந்தப் பெண்ணின் தங்கை) இந்த விவகாரத்தில் குறுக்கிட்டபோதுதான் கதை இன்னும் வினோதமானது. அதாவது அந்த சகோதரி, "எனது அக்கா எனது கணவருடன் வாழ்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேபோல், நானும் எனது அக்காவின் கணவருடன் (அத்தான்) வாழ விரும்புகிறேன்" என அவர் கூறியது நீதிபதிகளையே அதிர வைத்தது.
அதாவது இரு பெண்களுமே தங்கள் தற்போதைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்றும், பரஸ்பரம் துணைகளை மாற்றிக் கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவர்கள் இருவருக்குமே குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கணவரை மாற்றிக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்கள்.
நீதிமன்ற தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த கடத்தல் வழக்கைத் தள்ளுபடி செய்தது. சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் வயது வந்தவர்கள் என்றும் அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் எந்தக் குற்றச் செயலோ அல்லது கடத்தலோ நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது ஒரு தனிப்பட்ட குடும்ப விவகாரம் எனக் கூறி, அந்த கடத்தல் மனுவைத் தள்ளுபடி செய்தது.
நெட்டிசன்கள்
காதல், மோதல் எனப் பல வழக்குகளைச் சந்தித்த நீதிமன்றத்திற்கு, "கணவர்களை மாற்றிக்கொள்கிறோம்" என்ற இந்த வினோத கோரிக்கை புதிதாகவே இருந்திருக்கும்.. சட்டப்படி வயது வந்தவர்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை இருந்தாலும், இத்தகைய 'கணவர் எக்ஸ்சேஞ்ச்' போன்ற முடிவுகள் குடும்பக் கட்டமைப்பு மற்றும் குழந்தைகளின் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்!














Click it and Unblock the Notifications