சவுதியிடம் கையேந்தி.. அமீரக கடனை அடைத்த பாகிஸ்தான்! பின்னணியில் இந்தியா? வெளியான தகவல்
இஸ்லாமாபாத்: நீண்ட காலமாகவே பாகிஸ்தானுக்கு அமீரகம் உதவி வந்த நிலையில், இப்போது இரு நாட்டு உறவில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. கடனாகக் கொடுத்த ரூ.28,000 கோடியையும் மொத்தமாக வசூலித்து இருக்கிறது அமீரகம்.. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏன் இந்த திடீர் மாற்றம்.. இதில் இந்தியா எங்கிருந்து வருகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அதன் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாகவே நல்ல நிலையில் இல்லை. இதனால் அது வளைகுடா நாடுகளிடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கி வருகிறது. பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக உதவும் நாடுகளில் ஒன்றாக அமீரகம் இருக்கிறது. ஆனால், இப்போது சர்வதேச அரசியல் மெல்ல மாறி வருகிறது.

விரிசல்
நீண்ட கால நண்பர்களாக இருந்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் விழத் தொடங்கியிருக்கிறது.. பாகிஸ்தானுக்கு அமீரகம் 3.45 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ. 28,000 கோடி கடனை கொடுத்திருந்தது. பல ஆண்டுகளாகவே இந்த கடனை அமீரகமும் கேட்கவில்லை.. பாகிஸ்தானும் தரவில்லை. திருப்பி தருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டே வந்தது. இந்தச் சூழலில் தான் ஒரு வழியாகப் பாகிஸ்தான் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளது.
கடன்
பாகிஸ்தான் மத்திய வங்கி, ஏப்ரல் 23ம் தேதி அபுதாபிக்கு வழங்க வேண்டிய கடைசி 1 பில்லியன் டாலரைச் செலுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவே 2.45 பில்லியன் டாலர் செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் இந்த கடனை அவர்களாக முன்வந்து திரும்பத் தரவில்லை.. அமீரகம் அழுத்தம் கொடுத்த நிலையில், அதன் காரணமாகவே கடனை திரும்பக் கொடுத்துள்ளது. இப்போது இந்தக் கடனைத் திருப்பித் தரச் சொல்லி அமீரகம் கொடுத்த அழுத்தம் தான் சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
சவுதியிடம் கடன்
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானிடம் இந்தக் கடனை அடைக்கப் பணம் இல்லை. தனது மற்றொரு நட்பு நாடான சவூதி அரேபியாவிடம் இருந்து பெற்ற 3 பில்லியன் டாலர் நிதியுதவியை வைத்துத்தான், அமீரகத்தின் கடனை பாகிஸ்தான் அடைத்துள்ளது. அமீரகம் திடீரெனப் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை தி பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
காரணங்கள்
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரில், ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான் காட்டிய மென்மையான அணுகுமுறை அமீரகத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பாகிஸ்தான் தன்னை ஒரு மத்தியஸ்தராக முன்னிறுத்த முயன்றது. "எங்கள் பக்கம் நில்லுங்கள், இல்லையென்றால் விலகி இருங்கள்" என எதிர்பார்க்கும் அமீரகத்திற்கு, பாகிஸ்தானின் இந்த நடுத்தர நிலைப்பாடு எரிச்சலை ஊட்டியுள்ளது.
அடுத்து மிக முக்கிய காரணம்.. சவுதி அரேபியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையே சமீப காலமாக எண்ணெய் கொள்கை மற்றும் ஏமன் போர் விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், சவூதியுடன் பாகிஸ்தான் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கம் காட்டுவது அமீரகத்திற்குப் பிடிக்கவில்லை. இதுவே பாகிஸ்தானிடம் கறார் காட்ட முக்கிய காரணமாக இருக்கிறது.
மற்றொரு முக்கியமான காரணம், அமீரகம் இப்போது பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது. 2026ல் நடந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. 100 பில்லியன் டாலர் வர்த்தகம், 22 பில்லியன் டாலர் முதலீடு என இந்தியாவுடன் பிணைந்துள்ள அமீரகம், பாகிஸ்தான் மீதான தனது பிடியைத் தளர்த்தத் தொடங்கியுள்ளது.
ஏன் முக்கியம்
"பணம் கொடுத்தவன் எப்போதுமே முதலாளி தான்" என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம். 2027ம் ஆண்டு வரை கடனைத் திருப்பிக் கேட்க மாட்டோம் என வாக்குறுதி அளித்த அமீரகம், அரசியல் காரணங்களுக்காக இப்போது பணத்தை வசூலித்துள்ளது. இது பாகிஸ்தானைச் சவூதியின் காலடியில் இன்னும் அதிகமாக விழ வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications