உலக நாடுகளை அதிர வைத்த அமீரகத்தின் "அந்த" ஒரு அறிவிப்பு.. ஆனா இந்தியாவுக்கு ஜாக்பாட் தான்!
துபாய்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சந்தையை ஒபெக் அமைப்பே கட்டுப்படுத்தி வந்தது. இதற்கிடையே இந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அமீரகம் அதிரடியாக அறிவித்துள்ளது. அமீரகத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன.. இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு மிகப் பெரிய 'பூகம்பம்' ஏற்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வந்த ஓபெக் (OPEC) மற்றும் ஓபெக் பிளஸ் (OPEC+) கூட்டணியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரும் மே 1ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமீரகத்தின் இந்த அதிரடி முடிவு உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.

அமீரகம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிப்பதில் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியப் பங்கு வகிப்பது ஐக்கிய அரபு அமீரகம் தான். ஓபெக் அமைப்பின் மொத்த உற்பத்தியில் சுமார் 12 சதவீதத்தை அமீரகம் வழங்கி வருகிறது. இத்தகைய ஒரு முக்கிய நாடு வெளியேறுவது, ஓபெக் கூட்டமைப்புக்கும் அதன் தலைமை நாடான சவூதி அரேபியாவுக்கும் விழுந்த மிகப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
அமீரகம் இந்த முடிவை எடுத்தோம் கவிழ்த்தோம் என எடுக்கவில்லை.. அமீரகத்தின் இந்த முடிவுக்குப் பின்னால் ஒரு நீண்டகாலத் திட்டம் இருக்கிறது. ஓபெக் அமைப்பில் இருக்கும் நாடுகள், கச்சா எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்க உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற விதியை பின்பற்ற வேண்டும். அதாவது கச்சா எண்ணெய் சரியாமல் இருக்க.. உற்பத்தித் திறனைக் காட்டிலும் குறைவான எண்ணெய்யை உற்பத்தி செய்ய வேண்டி இருக்கும்.
என்ன காரணம்
ஆனால், இது அமீரகத்திற்கு செட் ஆகவில்லை. ஏனென்றால் அமீரகம் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 4.85 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அமீரகம், அதை 2027-க்குள் 5 மில்லியனாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால், ஓபெக் விதிகளின்படி அமீரகம் ஒரு நாளைக்கு 3.4 மில்லியன் பேரல்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். நாங்கள் இவ்வளவு முதலீடு செய்தும், எங்களால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியவில்லையே என்ற அதிருப்தி தான் தற்போது இந்த விலகலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 110.74 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சரக்குக் கப்பல்கள் செல்வதில் உள்ள சிக்கல் காரணமாக, இப்போதைக்கு எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அமீரகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இனி ஓபெக் கட்டுப்பாடுகள் இல்லாததால், அமீரகம் தனது உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து அதிகமாகி, எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. அதிகளவு கச்சா எண்ணெய்யை விற்க முடிவதால் அமீரகத்திற்கு அதிக லாபம்.. சந்தைக்கும் கச்சா எண்ணெய் அதிகம் வரும் என்பதால் விலையும் கட்டுக்குள் இருக்கும்.
இந்தியாவுக்கு நல்ல செய்தி
இது இந்தியாவுக்கும் ஒரு வகையில் நல்ல செய்தி தான். ஏனென்றால் தற்போது நிலவும் உலகளாவிய பதற்றத்தால் எண்ணெய் விலை குறையாமல் இருப்பது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரிக்கும். அதேநேரம் அமீரகம் தனது உற்பத்தியை அதிகரிக்கும்போது, கச்சா எண்ணெய் விலை குறையும். இது இந்தியா போன்ற அதிகப்படியான எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளுக்குச் சாதகமாக அமையும். மேலும், அமீரகத்தின் மீது எந்தவொரு உலக நாடும் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. இதனால் சிக்கல் இல்லாமல் நாம் தேவையான கச்சா எண்ணெய்யை வாங்கலாம்!
தனித்தனியாகச் செயல்பட்டு லாபம் சம்பாதிப்பதை விட, கூட்டாக இணைந்து சந்தையைக் கட்டுப்படுத்துவதே ஓபெக் அமைப்பின் நோக்கம். ஆனால், அமீரகத்தின் இந்த வெளியேற்றம் அந்தக் கூட்டமைப்பின் அடித்தளத்தையே ஆட்டியுள்ளது. மற்ற நாடுகளும் இதே பாதையைத் தேர்ந்தெடுத்தால், ஓபெக் என்ற அமைப்பு வெறும் பெயரளவிலான அமைப்பாக மாறக்கூடும். சர்வதேச அரசியல் சதுரங்கத்தில், அமீரகம் எடுத்துள்ள இந்தப் பாதை, அந்த நாட்டிற்கு பலத்தையே தரும் என்கிறார்கள்!














Click it and Unblock the Notifications