ஈரானின் உயிர் நாடி மீது தாக்குதல்.. நெருங்கும் கெடு! உக்கிரமடைந்த டிரம்ப்!
தெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக, தங்களின் கோரிக்கையை ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக, இன்று இரவு 8 மணி வரை காலக்கெடுவையும் விதித்திருந்தது. அமெரிக்கா விதித்த கெடு முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது ஈரானின் பொருளாதார உயிர்நாடியான, கார்க் தீவு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஈரான் மொத்தமாக காலியாகப்போகிறது என்றும், மிகப்பெரிய பேரழிவை சந்திக்கப்போகிறது எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கார்க் தீவு மீது தாக்குதல் ஏன்?
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90% இந்தத் தீவின் வழியாகவே நடைபெறுகிறது. அமெரிக்க அதிகாரிகள் இதனை ஈரானிய எண்ணெய் விநியோகத்தின் நரம்பு மண்டலம் என்று அழைக்கின்றனர். இது பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய பவளப்பாறைத் தீவு. இதன் ஆழமான கடல் பகுதி ராட்சத எண்ணெய் கப்பல்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
கார்க் தீவின் முக்கியத்துவம்
இங்கு சுமார் 3 கோடி பேரல் எண்ணெய் சேமித்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது சுமார் 1.8 கோடி பேரல் கச்சா எண்ணெய் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் நீண்டகாலமாகவே (1988 முதலே) இந்தத் தீவைக் கைப்பற்றுவது அல்லது அழிப்பது பற்றிப் பேசி வருகிறார். இதன் மூலம் ஈரானின் வருமானத்தை முடக்கி, அந்நாட்டு ஆட்சியை வீழ்த்த முடியும் என வெள்ளை மாளிகை நம்புகிறது. எனவேதான் தற்போது கார்க் தீவு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
ஈரானின் தற்காப்பு வளையம்
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கடற்படை கண்ணிவெடி கிடங்குகள் மற்றும் விமான நிலைய வசதிகள் போன்ற இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கியுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இன்னும் தாக்கவில்லை என்று கூறியிருக்கிறது. இந்தத் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சிப்பதால், ஈரான் அங்கு கூடுதல் ஏவுகணைகளையும், இராணுவ வீரர்களையும் குவித்து தற்காப்பு வளையத்தை பலப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications