உடைந்தது அதிமுக.. இந்த ஒருவரின் கையில்தான் அதிமுக எதிர்காலம்.. எடப்பாடி என்ன செய்ய போகிறாரோ!
சென்னை: எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் ஜேசிடி பிரபாகர் கையில் இருக்கிறது. எடப்பாடிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏ.க்களும், எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ.க்களும் பிரிந்து நிற்பதால் மீண்டும் ஒரு பிளவு ஏற்படும் சூழல் அதிமுகவில் வேகமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற அதிமுக தலைவராக யாரை அங்கீகரிக்க வேண்டும் என்கிற தீர்ப்பு சபாநாயகர் கையில் இருக்கிறது. எடப்பாடியின் தலையெழுத்தை சபாநாயகராக தேர்வு செய்யப்படும் ஜேசிடி பிரபாகரிடம் இருக்கிறது.
செக் வைத்துள்ள எடப்பாடி
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் இன்று நடக்கவிருக்கிறது. தவெக சார்பில் முறையே ஜேசிடி பிரபாகர், ரவிசங்கர் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியில் இல்லை என்பதால் போட்டியின்றி இவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நாளை 13-ந்தேதிதான் பரபரப்பான நாள். சட்டப்பேரவையில் தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கவிருக்கிறார் விஜய். சபாநாயகரை தவிர்த்து பார்த்தால் பேரவையில் தவெகவின் பலம் 106. திமுகவின் தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் 120 பேரின் ஆதரவு விஜய்க்கு கிடைக்க கூடிய சூழல் இருக்கிறது.
தற்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பதால் அதிமுக வாக்குகள் விஜய்க்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்கிற வகையில் பிரிந்து காணப்படுகிறது.

ஆனால், 13-ந்தேதி விஜய் கோரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் , ஒவ்வொரு எம்.எல்.ஏ. வும் ஆதரித்து வாக்களிப்பதா? எதிர்த்து வாக்களிப்பதா? என்கிற உத்தரவை அந்த எம்.எல்.ஏ.க்கள் சார்ந்துள்ள கட்சியின் கொறடா என்ன உத்தரவிடுகிறாரோ அதன்படி எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்ள வேண்டும். கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்தால் அந்த எம்.எல்.ஏ.வின் பதவி பறிபோகும்.
அதிமுகவில் பிளவு - எடப்பாடிக்கு சிக்கல்
இந்த நிலையில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடியை தேர்வு செய்திருப்பதாக எடப்பாடி ஆதரவு அணி 17 எம்.எல்.ஏ.க்களும், வேலுமணியை தேர்வு செய்திருப்பதாக 30 எம்.எல்.ஏ.க்களும் மனு கொடுத்துள்ளனர். அதிமுக கொறடாவாக சி.வி விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். இதனை சீர் தூக்கி எந்த அணிக்கு சாதகமாக சபாநாயகர் தீர்ப்பு அளிக்கிறாரோ அவர் தான் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவர். அந்த அணி தரப்பில் கொறடாவாக யாரை நியமித்து உள்ளனரோ அவர் தான் கொறடாவாக செயல்பட முடியும்.
வேலுமணியை சபாநாயகர் அங்கீகரித்து விட்டால் கேம் ஓவர்
அந்த வகையில் வேலுமணியை சபாநாயகர் அங்கீகரித்து விட்டால், வேலுமணி நியமிக்கும் கொறடாவின் உத்தரவை எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஏற்க வேண்டும். வேலுமணி அணியின் கொறடா, விஜய்யின் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் அதனை எடப்பாடியின் 17 எம்.எல்.ஏ.க்களும் ஏற்க வேண்டும். இதற்கு மாறாகவோ, எதிர்த்தோ வாக்களித்தால் அந்த 17 பேரின் பதவியை பறிக்க சபாநாயகரிடம் வேலுமணி தரப்பு புகார் கொடுத்தால், அதனை சபாநாயகர் ஏற்க வாய்ப்பிருக்கிறது.
அதனால் தங்களுக்கு செக் வைத்துள்ள எடப்பாடிக்கு செக் வைக்க இப்படிப்பட்ட அரசியல் மூவ்களை நகர்த்தி வருகிறது சண்முகம் தரப்பு. எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் ஜேசிடி பிரபாகர் கையில் இருக்கிறது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு பல சம்பவங்களை ஏற்படுத்தக் கூடும்! இதனால் மீண்டும் அதிமுக உடைவதை நோக்கி செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications