சாதீய ஆதிக்கங்கள்
வரலாறுகளைப் பற்றி மட்டும் அலசி விட்டு, சம கால நிகழ்வுகளைக் குறித்து கவனமற்றிருப்பது பல துறைகளிலும் இருக்கும்குறைபாடுதான். ஆனாலும் இன்னும் பிராமணத் துவேசம், தந்தை பெரியாரின் சமூக நிலைப்பாடு என்று வரலாற்றினைமேற்கோள் காட்டி வாதாடும் மனிதர்களிடம் மாறி வரும் உலகையும் கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்கவேண்டிக்கொள்கிறேன். சாதீய ஆதிக்கங்களை குறித்த சமூகக் கவலை மற்றும் அக்கறை தேவையான ஒன்று என்றாலும்,வராலாற்றை விடுத்து சமகால நிகழ்வுகளையும் நிறைய அலசுங்கள்.
பிராமணர்கள் ஆதிக்கமே, சாதீய ஆதிக்கம் என அடையாளம் காணப்பட்ட காலக்கட்டங்களிலிருந்து, நாம் பல மைல் தூரம்கடந்து வந்து விட்டோம். சமூகப்பாகுபாடுகளை களைந்து, அனைத்து துறைகளிலும் அனைவரும் பங்கு பெறுவதற்கான சூழலைஇந்திய மாநில, மத்திய அரசாங்கள் ஏற்படுத்தி கொடுத்து விட்டன என நான் நம்புகிறேன். தனி மனித வளர்ச்சிக்கு காரணமாகஅமையும் கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள இட ஒதுக்கீடுகள் பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் பயனுறும்வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
பெரியாரின் காலத்திய பிராமண சாதிய ஆதிக்கம் இன்று இருக்கிறதா? என்ற சிறிய, எளிய கேள்வியுடன் என் அலசலைஆரம்பிக்கிறேன். இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும். இன உணர்வுகளும், அதன் அடிப்படையில் வழங்கிக் கொள்ளும்சலுகைகளும் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட இன உணர்வுகள் அனைவருக்கும் இருக்கிறது. சதவீதங்கள்வேறுபடலாம்.
சாதிய அடையாளங்களைப் பிரதானப்படுத்தாமல் கல்வித்துறையிலோ, அரசியல் துறையிலோ அல்லது இலக்கியத்துறையிலோ பங்குகொள்ள முடியாத சூழலைத்தான் நம் சமூகத்தின் குறைபாடாக நான் கருதுகிறேன். முற்காலத்திய சாதிய ஆதிக்கங்களுக்கு எதிரானபோராட்டங்களும், சமூக நீதி நிலை நாட்ட வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் நம்முடைய தனிப்பட்ட சாதிஅடையாளங்களை சாதிச் சான்றிதழ்கள் மூலமாக நிரந்தரப் படுத்திவிட்டது. இதை விலக்கிய அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்ளயாராலும் இயலவில்லை. என் நிறம் கருப்பு என்பதுடன் என் சாதியைப் பற்றிய அடையாளத்தையும் சேர்த்தே வைத்திருக்கிறார்கள்அனைவரும்.
ஆதிக்க சாதியென்று பிராமணர்களை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் சமூக இயக்கத்தின் வெற்றி, மற்ற இனத்திற்கான சமூகபங்கேற்பை/மதிப்பை அதிகப்படுத்தியது. ஆனால் இந்த இனங்களுக்குள்ளே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது முதல்சாபக்கேடு. பிராமணர்களின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்த இவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான தங்களது ஆதிக்கமனப்பான்மையை கைவிட முழுமையாக முன்வராதது இரண்டாவது சாபக்கேடு . பிராமணர்களுக்கும் பிற சாதியினருக்கும்இடையேயான சாதிக்கலவரங்கள் நிகழ்ந்து உயிர் பலியாகி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பிற சாதியினருக்கிடையேசாதிக்கலவரங்கள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயிருக்கிறது தமிழகத்தில். பெரியார் புகழ் துதிக்கும் பல்வேறு சமூகஅமைப்புகளும் ,அரசியல் கட்சிகளும் இவ்வகையான பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்துள்ளன/இருக்கின்றன. பிராமணர்கள்சம்பந்தப்படாத சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு இக் கட்சிகள் அடிகோலிவிட்டன.
இன்றைய சமூகத்துறையில் இவ்விதமான ஏற்றத்தாழ்வுகளால் விளைந்துவிட்ட தீமைகள் ஏராளம். அரசியல் கட்சிகளின் சாதியஅடிப்படையிலான வேட்பாளர் தேர்வுகள். அரசு இயந்திரங்களில் ஊடுருவியிருக்கும் சாதிய உணர்வுகள், பெருகிவரும் சாதிய சங்கங்கள்இவையெல்லாம் சாதி என்ற அடையாளத்தை ஒருவனுக்கு தொடர்ந்து நினைவூட்டும் வண்ணம் இயங்கி வருகின்றன. "சாதிஅடிப்படையில் புறக்கணிப்பு" என்ற சமூக அநீதியை எதிர்த்து போராடிய பெரியாருக்கு, சாதிய அடையாளங்களை மறந்து விடாத சமூகஅமைப்பை உருவாக்கி நன்றிக்கடன் செய்திருக்கிறோம் நாம். சலுகைக்களுக்காக பிற்படுத்தப்பட்டவனாக அடையாளம்காணப்படுவதில் நமக்கு எவ்வித கெளரவக் குறைச்சலும் இல்லை.
அடையாளம் அடையாளம் என்று திரும்ப திரும்ப புலம்புகிறான் என்று சொல்கிறீர்களா? இதனால் ஏற்படும் சிக்கல்தான்இப்பிரச்சனையை நிரந்தரப்படுத்தி விடுகிறது. சாதிய அடிப்டையில் ஒன்றிணைவது என்பது மாணவ சமூகத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. இதன் வீச்சை நான் முழுமையாக உணர்ந்தது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மேலாண்மை பயின்ற போதுதான்.இரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கிடையேயான போட்டி, மெஸ் செகரட்டரி, சேர்மன் என்ற பல்வேறு தேர்வுகளில்வெளிப்பட்டது. இந்த போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வாங்கிய ஆசிரியர்களும் செயல்பட்டது மிகவும்அதிர்ச்சிக்குரிய உண்மை. கல்வியறிவு நாகரீகத்தை மேம்படுத்தவில்லை. சாதிய உணர்வுகளை வலுப்படுத்துகிறது. அரசியல்உணர்வுகள் மாணவர்களிடையே குறைந்து வருகிறது என்று மாலன் சொன்னார். ஆனால் சாதிய உணர்வுகள் வலுப்பட்டுஇருக்கிறது. மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்று உரக்கச் சொன்ன சமூக ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கு சாதிவேண்டாம் எனச் சொல்ல தைரியமில்லை.
பொது நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் சாதி அடிப்படையிலான சங்கங்கள்.தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்காக தனி சங்கங்கள் வைத்துக் கொள்கிறார்கள். வேலையென்று உள்ளே நுழைந்த பின்பும்,இணைந்திருப்பதில் என்ன பிரச்சனை? பிரிந்திருப்பது புறக்கணிப்பாலா? அல்லது சவுகர்யத்திற்காகவா?.
ஆனால் இத்தகைய பிற இனத்தவர்களையெல்லாம் ஒன்றுசேர்க்கும் விசயம் "பிராமணீய எதிர்ப்பு". அவ்வப்போது அதுவரலாற்றுப் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டி நிகழும். தனக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குழிபறிப்பது மறந்து போகும்.
பார்ப்பார் பட்டி, கீரிப்பட்டி என்ற இரு ஊர்களில் பஞ்சாயத்து தேர்தல் நிகழ்வது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது. இது ரிசர்வ்ட்தொகுதி. தலித் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஏனென்றால் உயிருக்குஉத்தரவாதமில்லை. இந்திய சனநாயகத்திற்கு இடப்பட்ட மிகப்பெரிய சவால் இது. தாழ்த்தப்பட்டவர்களின் ஆளுமையைஏற்றுக்கொள்ளாத பிற இன மக்கள். பெரியார் புகழ் போற்றும் அனத்துக் கட்சிகளும் தீர்க்க இயலாத விசயம். மீண்டும்இங்கே தேர்தல் விரைவில் நடக்கப் போகிறது. இவ் விசயத்தில் எங்கே போனது சமூக நீதி?
இதற்கான விடைகளை காணும் தைரியம் இருக்கிறதா நம்மிடம். இதை விடுத்து வரலாற்றினை அலசவும் படிக்கவும் எனக்குவிருப்பமில்லை.
- ராஜ்குமார்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1.பொறிகலங்கிப் போன பொறியியல் கல்வி
2.மற்றுமொரு நிஜம்
3.நான் பார்த்த மோசமான படங்கள்
4.பல்லிடை அவல்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.