தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?
இரு மணம் இணையும் திருமணங்கள் இன்று பழமை தவறி, பல வழிகளில் நடந்தேறி வருகின்றன.
தமிழர் திருமண முறைகளை நாம் ஒட்டுமொத்தமாய் மறந்து வருகிறோம் அல்லது வசதிக்கேற்ப பிறழ்ந்து வருகிறோம். காலமாற்றத்திற்கேற்ப சுருக்கமாக, வழமையான முறையின்றி நடந்து வருகின்றன திருமணங்கள்.
வரதட்சணைக்கு வேலையே இல்லாத தமிழர் திருமணங்கள் முன்பு எப்படி நடந்தேறின தெரியுமா?.. மூத்தோர் வைத்துவிட்டுப்போயிருக்கும் முறைகள் தெரியுமா?
கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா...
தமிழ் திருமண நிகழ்வுக்கான பொருட்கள்:
மஞ்சள், குங்குமம், திருநீறு, கற்பூரம், பச்சரிசி, தேங்காய், தேன், பன்னீர், முந்திரி, திராட்சை, கற்கண்டு, குங்குமப்பூ, வெற்றிலை, வெட்டுப்பாக்கு, வாழைப் பழம், எலுமிச்சை, அவல், சர்க்கரை, நவதானியம், வேள்விப் பொருட்கள் அனைத்தும் அடங்கிய பூரணாகுதி, பசும்பால்,பசு நெய், கலசம், உதிரிப் பூக்கள், தாமரைப் பூ, அருகம்புல், 3 முழம் பட்டுத் துண்டு, குத்துவிளக்கு, மாவிலை, பித்தளை செம்பு, நிறைகுடம்தண்ணீர், தலை வாழை இலை, அரிசி மாவு
(இந்தப் பட்டியலில் வரதட்சணை, தங்கம் இதெற்கெல்லாம் நம் மூத்தோர்கள் வேலையே வைக்கவில்லை என்பதைப் பாருங்கள்)
முன்னேற்பாடுகள்:
இறைவன், இறைவி நிறை குடம் வைக்கும் இடத்திலும், மணமக்கள் அமரும் இடத்திலும் "எட்டிதழ்த் தாமரை" மாக்கோலம் போடவேண்டும். அதன் முன்பாக நடத்துபவர் அமர்ந்து "ஐம்பெருந்தூய்மைகளை" செய்ய வேண்டும்.
அது என்ன ஐம்பெருந்தூய்மைகள்?:
ஒரு சொம்பில் தூய நீர் எடுத்துக் கொண்டு, அதனை நீரினில் நான்காய் நிகழ்ந்தாய் போற்றி எனப் போற்றி, வாச மலரைப் போற்றியநீரில் இட்டு வணங்க வேண்டும்.
ஒரு பூவினை நீரினில் நனைத்துப் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி என்று போற்றித் தெளிக்க வேண்டும்.
தொடர்ந்து இறைவா! மண்ணும், நீரும், நெருப்பும், வளியும், வானும் உங்கள் அருளால் தூய்மையாகுக என வேண்ட வேண்டும்.யாக்கைப் பொன்னெடுங்கோயிலாய்ப் புகுந்தாய் போற்றி, உயிருக்கு உயிரானாய் போற்றி எனப் போற்றி, உடல் மேல்தெளித்துஉடல், ஆன்மத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.
வழிபடும் பொருட்களின் மேல் எல்லாம் சிவனென நின்றாய் போற்றி என்று போற்றித் தெளித்து வழிபடும் இடத்தைத் தூய்மையாக்கிடவேண்டும். மூலமந்திரத்தை மனதில் ஒருமுறை ஆன்மார்த்தமாக நிறுத்தி மந்திரத் தூய்மை செய்ய வேண்டும்.
தூய நற்சோதி ஆனவ போற்றி எனப் போற்றி திருக்குடங்கள், குண்டம் இவற்றின் மீது தெளித்து இலங்கித் தூய்மை செய்ய வேண்டும்.
.இந்த ஐம்பெருந்தூய்மைகள் நிறைந்த பின், நுனி வடக்கு நோக்கி இருக்கும்படி தாமரைக் கோலத்தின் மீது தலை வாழையை இட வேண்டும்.
அதன் மேல் நெல், பச்சரிசி பரப்பி ஐம்முகமுக்கோணச் சக்கரத்தை வரைந்து அதில் ஓம் என எழுத வேண்டும்.
நிறை குடங்களுக்குள் நறும்புகை காட்டித் திறுநீறு, தூய சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம் கலந்த நீரை மூல மந்திரத்தை ஓதிக் கொண்டேநிறைகுடங்களில் ஊற்ற வேண்டும்.
ஒவ்வொன்றிலும் காசு இட்டு, மாவிலை வைத்து, மஞசள் பூசிய தேங்காய்களை அதன் மீது வைக்க வேண்டும். நிறைகுடங்களின் உள்ளும்,தேங்காயின் மேலும் தருப்பையினால் கூர்ச்சமிட்டு வைக்க.
நிறைகுடங்களுக்குச் சந்தனம், மஞ்சள், பொன்னரிசி, குங்குமம் இட்டு, குடங்களுக்கு மாலையும் இட வேண்டும்.
வழிபாட்டைத் தொடங்கும் முன்:
1.பார்வையால் வேறுபடுத்தல்
"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு வலக்கை நடுவில், ஆள்காட்டி விரல்களை நீட்டி ஏனைய விரல்களை மடக்கி நுனிவாயிலாக பார்க்க வேண்டும்.
2. தெளித்தல்
"நம சிவாய" என ஓதிக் கொண்டு, ஒரு மலரை நீரில் நனைத்து வழிபாட்டுக்குரிய பொருட்களின் மேல் தெளிக்க வேண்டும்.
3. உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தல்
"நம சிவாய" ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களை மும்முறை தட்டுதல் (இவ்வாறு தட்டுவதால் அப்பொருட்களின்உள்ளிருக்கும் ஆற்றல் வெளிப்படும்.)
4. அமைதிப்படுத்தல்
"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களைச் சுற்றி, அதன் பின் கையைக்கவிழ்த்துக் காட்டுதல் (பொருட்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலை சுற்றிக் காட்டிய இடத்தினுள் அமைதிப்படுத்தி இருக்கமாறு செய்தல்)
(தொடரும்)..
- அஸ்வின் தாயுமானவர்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.