27 தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில், 20.3.2008 அன்று அளிக்கப்பட்ட இவ்வாண்டின் நிதி நிலை அறிக்கையில், தொண்டால் பொழுதளந்த தூய தமிழ்ச் சான்றோர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் வளரும் தலைமுறைக்கு மட்டுமின்றி வரும் தலைமுறைகளுக்கும் பயனளிக்கத்தக்க வகையில், தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வகையில் இதுவரை 67 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பரிதிமாற் கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலாக 37 தமிழறிஞர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையாக்கப்பட்டு, பரிவுத் தொகையாக 3 கோடியே 9 லட்சம் ரூபாய் அவர்களின் மரபுரிமையர்க்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெரியசாமித் தூரன், பேராசிரியர் வெள்ளைவாரணனார் உள்ளிட்ட 27 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை, ஆகியவற்றின் அடிப்படையில், அவர் தம் மரபுரிமையர்களுக்குப் பரிவுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பெரியசாமித் தூரன், வெள்ளைவாரணனார், பண்டிதர் அயோத்தி தாசர், ஆபிரகாம் பண்டிதர், சதாவதானி செய்குத் தம்பி பாவலர், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை ஆகிய அறிஞர்களின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டு இச்சான்றோர்களின் மரபுரிமையர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் பரிவுத் தொகை வழங்கப்படும்.
உடுமலை நாராயண கவி, அண்ணல் தங்கோ, அவ்வை டி.கே.சண்முகம், விந்தன், தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், டாக்டர் சஞ்சீவி, கவிஞர் மீரா, சு.சமுத்திரம் உள்ளிட்ட 21 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டு இச்சான்றோர்களின் மரபுரிமையர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் பயனாக நாட்டுடமையாக்கப்படும் படைப்புகளை அளித்துள்ள 27 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மொத்தம் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications