சென்னை நடன கலைஞருக்கு சிறந்த ஆசியப் பெண் விருது
லண்டன்: லண்டனில் வசிக்கும் சென்னை பரதநாட்டிய கலைஞர் ஷோபனா ஜெயசிங் சிறந்த ஆசியப் பெண் என்ற விருதைப் பெற்றுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனைபுரியும் ஆசியப் பெண்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு 9 பெண்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. லண்டனில் நடந்த விழாவில் அவர்களுக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேர் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
கலை மற்றும் கலாசார பிரிவுக்கான விருது சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷோபானா ஜெயசிங் என்பவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1957ல் சென்னையில் பிறந்த ஷோபனா 1981ல் லண்டனில் குடியேறினார். அங்கு நடனப்பள்ளி நடத்திவரும் அவர், பரதநாட்டியம் மற்றும் மேற்கத்திய நடனங்களில் வல்லவர்.
இவரைத் தவிர, ஐடிஎன் செய்தி நிறுவன ரெசிடன்சியல் எடிட்டர் ஆர்த்தி லுகா, ஆஷா காமேகா, சூ, அஸ்தானி, அஸான் அகமது ஹஸ்பா, பாலா தாக்கர் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.