கிராமத்தை தத்தெடுக்கும் பல் மருத்துவ சங்கம்
நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தை தத்தெடுத்து பல் மருத்துவ சேவை அளிக்க இந்திய பல் மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சங்கத்தின் நாமக்கல் கிளை துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நாமக்கல் நளா ஹோட்டலில் நடந்த விழாவுக்கு இந்திய பல் மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் தீபக் கம்தார் தலைமை வகித்தார். கிளையை துவக்கி வைத்து சங்கப் பொதுச் செயலர் டாக்டர் அசோக் தோப்லே பேசியதாவது:
இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பல் மருத்துவர்கள் பட்டம் முடித்து வெளியேறுகின்றனர்.
இவர்கள் அனைவரையும் கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றும் நோக்கிலும், பல் மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தவும் இந்திய பல் மருத்துவ சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் அனைத்துப் பகுதிகளிலும் சங்கக் கிளைகள் துவக்கப்பட்டு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் கிளை சார்பில் வலையப்பட்டி கிராமத்தை தத்தெடுத்து ஒரு மாதம் முழுவதும் அப் பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
சங்க மாநிலத் தலைவர் என்.எஸ். சிவக்குமார், மாநிலச் செயலர் பி. விஜயகுமார், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பல் மருத்துவ பயன்பாடு குறித்து விளக்கிப் பேசினர்.
நாமக்கல் கிளைத் தலைவர் என்.எஸ். லட்சுமி நரசிம்மன், செயலர் எஸ். வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.