அமெரிக்காவில் தமிழமுதம் பருக!

அந்த ஆனந்தத்தை பிறருக்கும் அளித்து, தாங்களும் அனுபவிக்க வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிதான் அமெரிக்கத் தமிழ்த் திருவிழா. ஜூலை 4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை மூன்று தினங்கள் நடைபெறும் இத் 'திருவிழா'வுக்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியமும், தமிழ் சங்க பேரவைத் தலைவர் தில்லைக் குமரனும்.
இந்த நிகழ்ச்சியை நடத்தும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை முற்றிலும் வரி விலக்கு பெற்ற ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும். தமிழ் மொழியின் பெருமைகளையும், பண்பாட்டுச் சிறப்புகளையும் புலம் பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, கடந்த 21 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கனடாவில் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 4-ம் தேதி, விடுமுறை தினத்தில் தமிழ்த் திருவிழா கொண்டாடுவது இப்பேரவையின் வழக்கம். இந்த ஆண்டு இந்த விழாவை மிகப் பெரிய திருவிழாவாக எடுக்கின்றனர்.
தமிழகத்திலிருந்து தமிழ் ஆர்வலர்களும், இசை விற்பன்னர்களும், பட்டிமன்ற கலைஞர்களும் திரளாய் இந்நிகழ்வில் பங்கேற்று தமிழ் விருந்து படைக்க உள்ளனர், திரை கடல் கடந்து திரவியம் தேடி வந்திருக்கும் தமிழர்களுக்காக.
வட அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னி லாண்ட் புகழ் ஓர்லாண்டோ நகரில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
பெட்னா தமிழ் விழா-2008 எனப் பெயரிடப்பட்டுள்ள இத் திருவிழாவில் கலந்து கொள்ள 20க்கும் மேற்பட்டோர் குழுவாகப் பதிவு செய்தால் நுழைவுக் கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களாக இருந்தால் 50 சதவிகிதம் தள்ளுபடி.
இசையறிஞர் பெ.தூரனின் நூற்றாண்டு விழாவும் இத் திருவிழாவுடன் இணைத்து கொண்டாடப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, http://www.fetna.org/ எனும் இணையதளத்தைப் பார்க்கவும்.












Click it and Unblock the Notifications