'மெட்ராஸ் 369' - ஒருவார கலக்கல் கொண்டாட்டம்!
சென்னை: மெட்ராசாக உருவாகி சென்னையாக மாறிய இந்த சிங்கார மாநகருக்கு இந்த ஆண்டு 369-வது வயது பிறக்கிறது.
இதையொட்டி படுவிமரிசையான 'சென்னை பிறந்த நாள் விழா' கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு வாரம் நடக்கும் இக் கொண்டாட்டங்களையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கலகல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை மாநகரம் மெட்ராஸ் எனும் பெயரில் உதயமானது. வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி இந்நகருக்கு 369 வயதாகிறது. பாரம்பரியமான இந்த சென்னையைப் பற்றி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக மெட்ராஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது.
மெட்ராஸ் டே!
இதுபற்றி சென்னையில் மெட்ராஸ் டே' நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எஸ்.முத்தையா, வின்சென்ட் டி சவுசா, வி.ஸ்ரீராம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மெட்ராஸ் டே கொண்டாட்டம் கடந்த ஆண்டுகளில் தென்சென்னையில் மட்டும் நடந்தது. இந்த ஆண்டு 17-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு நகர் முழுவதும் குறிப்பாக ராயபுரம், அண்ணாநகர் போன்ற வடசென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். 50 அமைப்புகள் மொத்தம் 60 வகையான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
பராம்பரியமிக்க சென்னையின் பிறந்த நாள் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம் என்பது போன்ற நாட்கள் மக்கள் மனதில் இருப்பதைப் போல சென்னை பிறந்த நாளும் இனி மக்கள் மனதில் இடம்பெற வேண்டும்.
புகைப்படக் கண்காட்சி
பாரம்பரியமிக்க கட்டிடங்களின் வழியே நடந்து செல்லுதல், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி பேசுதல், ஆவணப்படம் திரையிடுதல், பராம்பரிய உணவுத் திருவிழா, வினாடி வினா, கட்டுரைப் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், அரிய புகைப்படக் கண்காட்சி, அஞ்சல் தலை, நாணயங்கள் கண்காட்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன என்று கூறினர்.












Click it and Unblock the Notifications