பகுத்தறிவு வேண்டும்-கனிமொழி!
சென்னை: இளைஞர்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என கவிஞர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை கவிஞர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:
திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் பேச என்னை அழைத்துள்ளீர்கள். பொதுவாக, மகளிர் அணி மாநாடு, பெண்ணியம், பெண்களும் ஊடகங்களும் என்பது போன்ற கருத்தரங்குகளில் பேசத்தான் பெண்களை அழைப்பார்கள்.
ஆனால் இது பெரியார் பாசறை அல்லவா... இங்குதானே பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைக்கும்...
இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை 41 சதவீதம். எனவே, நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.
இளைஞர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். கேள்வி கேட்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கேள்வி கேட்டால்தான் புரட்சி வெடிக்கும். உலகப் புரட்சிகளின் பின்னணி கேள்விகள்தான்.
படிப்பில் சிறந்து விளங்கினாலும் சமூக அக்கறை இல்லாவிட்டால் படித்த படிப்பால் ஒரு பயனும் இல்லை. இளைஞர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள்.
இன்று மதங்களால்தான் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. மதம் இல்லாவிட்டால் தலிபான் பிரச்சினை இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. முன்னேறிய நாடுகளில்கூட மதங்கள் தங்கள் பிரச்சினைகளை அரங்கேற்றி வருகின்றன. மதங்கள் சிந்தனையை மழுங்கடித்துவிடும்.
திராவிட இயக்கங்களால்தான் இடஒதுக்கீடு வந்தது. இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்க முடிந்திருக்கிறது. மருத்துவ கல்லூரிகளில் அதிகளவு சேர்ந்துள்ளனர்.
சமூக மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருக்கிறார்கள். இதற்குச் சரியான தீர்வு பெரியாரின் கருத்துகளை இளைஞர்கள் மனதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications