கோவி. மணிசேகரன், வேள்நம்பிக்கு ஆதித்தனார் விருது
தினத்தந்தி நாளிதழ் இந்த விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது மற்றும் இலக்கிய விருது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த தமிழறிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கோவி. மணிசேகரனுக்கு ரூ. 1.5 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும். ஆதித்தனார் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வேல்நம்பிக்கு ரூ. 1 லட்சம் பரிசளிக்கப்படும்.
மதுரையில், செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் ஆதித்தனாரின் 104வது பிறந்த நாள் விழாவின்போது இரு தமிழறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
தினத்தந்தி இயக்குநர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் முன்னிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராஜேந்திரன் விருதுகளை வழங்குவார்.
1000 கதைகள் கண்ட மணிசேகரன் ..
வேலூரைச் சேர்ந்த கோவி. மணிசேகரன் வரலாற்றுப் புதினங்களை எழுதுவதில் புகழ் பெற்றவர்.
20 வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் மற்றும் இசையில் கற்றுத் தேர்ந்தார். தொல்காப்பியம் முதல் நவீன இலக்கியம் வரை கரை தேர்ந்தவர்.
1000க்கும் மேற்பட்ட வரலாற்று புதினங்கள், சமூக சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். 120 நாவல்களையும் அவர் படைத்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது, கலைஞர் விருது, ராஜராஜன் விருது, திரு.வி.க. விருது, எம்.ஜி.ஆர்.விருது உள்பட 44 விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
தனது பார்வையில், ராமாயணத்தை கோவி ராமாயாணம் என்று படைத்துள்ளார். இதில் மொத்தம் 4000 பால்கள் அடங்கியுள்ளன. தென்னங்கீற்று உள்ளிட்ட அவரது நான்கு நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
கவிதையில் சிறந்த வேள்நம்பி ...
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேள்நம்பி தமிழாசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி மிகச் சிறந்த கவிஞராகவும், நாடகாசிரியராகவும் மிளிர்பவர்.
அவர் எழுதிய பயணம் என்ற நாவலுக்குத்தான் ஆதித்தனார் இலக்கிய விருது கிடைத்துள்ளது.
மறைந்த முதல்வரும், திமுகவை நிறுவியவருமான அண்ணாதுரையின் வாழ்க்கை பயணத்தில் நடந்த (1948 முதல் 1969 வரையிலான காலகட்டம்) வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது இந்த நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.