சோழர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு
பண்பொழி: பண்பொழி அருகே உள்ள கிராமம் கோட்டைதிரடு. ஆறுமாதங்களுக்கு முன்பு இ.ம.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான மகேஷ்குமார், முகமது செய்யது இப்ராகிம், முஜிபுர் ரகுமான் ஆகியோர் முதுமக்கள் தாழியின் உடைந்த பகுதிகள், மரத்தினால் செய்யப்பட்ட யானை, சங்க கால செங்கல், (1 1/2x1") மற்றும் பானையின் உட்பக்கம் எழுதப்பட்ட, வரை கணித எழுத்துக்கள் போன்ற பொருட்களை கண்டெடுத்தனர்.அப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் அருணாச்சலம், அவற்றை குற்றாலம் தொல்பொருள் அருட்காட்சியகத்தின் அதிகாரி சந்திரவாணனிடம் ஓப்படைத்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சோழர் கால (இராஜராஜன் காசு) நாணயங்கள் இரண்டு கிடைத்துள்ளன. இவ்விரண்டு நாணயங்களின் மதிப்பு, சோழர் காலத்தில் 4 பசு மாடுகள், அல்லது எட்டு ஆடுகள், அல்லது 16 மூடை நெல் அல்லது ஒரு இணை வைரத்தோடு இவைகளுக்கு சமம் என சந்திரவாணன் கூறினார்.
எனவே இப்பகுதி சங்க காலம் தொடங்கி சோழர் காலம் வரை வணிக தலமாக இருந்திருக்க கூடும் எனத் தெரிகிறது. தகவலறிந்த குற்றாலம் தொல் பொருள் அருட்காட்சியக அலுவலர் தொல் பொருட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இ.ம.அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் உரையாற்றினார்.
மேலும் கோட்டை திரடு பகுதியில் அகழாய்வை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுயளித்தார். பள்ளி தலைமையாசிரியை சகிலாசாந்தினி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். நாணயங்களை கண்டெடுத்த மாணவர்களை ஆசிரியர், ஆசிரியைகள் அனைவரும் பாராட்டினர்.