சென்னையில் சர்வதேச தமிழ் கருத்தரங்கம்

சென்னை: சென்னையில் வருகிற 17ம் தேதி 4 நாள் சர்வதேச தமிழ் செம்மொழி கருத்தரங்கம் தொடங்குகிறது. 20ம் தேதி வரை இது நடைபெறுகிறது.
செம்மொழி தமிழ் சர்வதேச கருத்தரங்கம் - 2008 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருத்தரங்கத்திற்கு, சென்னையில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகம் மற்றும் மைசூரில் உள்ள செம்மொழி தமிழ் மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இதுகுறித்து ஆசிய ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஜான் சாமுவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் ஒரு மாநில மொழி மட்டுமல்ல, தேசிய மொழியும் கூட.
இலங்கை, சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகவும் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு மொழிக்கு இந்தியாவைத் தாண்டி ஆட்சி மொழி அந்தஸ்து இருப்பது தமிழுக்கு மட்டுமே.
இந்தியாவில் ஆட்சி மொழியாகவும், செமமொழியாகவும் திகழும் தமிழ், உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பேசப்படுகிறது.
இந்த கருத்தரங்கம் மூலம் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்கு, தமிழ் குறித்த மேலும் பல விரிவடைந்த தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உலக அளவில் தமிழ் குறித்த ஆய்வுகளுக்கு ஊக்கம் கிடைக்கும். வெளிநாட்டினர் பலருக்கு தமிழ் குறித்த ஞானம் கூடுதலாகும்.
உலக அளவில் சிறந்து விளங்கும் வெளிநாட்டுத் தமிழறிஞர்களான பேராசிரியர் ஆர்.இ. ஆஷர் (ஸ்காட்லாந்து), பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி (ரஷ்யா), பேராசிரியர் டேவிட் பக் (அமெரிக்கா), பேராசிரியர் ஜங் நாம் கின் (தென் கொரியா), பேராசிரியர் சண்முகதாஸ் (இலங்கை) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்தரங்கில் 35க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications