பொன்னம்பல அடிகளாருக்கு வள்ளுவர் விருது
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
2008ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதினை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
2007ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கவிதைப் பித்தனுக்கும், அறிஞர் அண்ணா விருது பேராசிரியை சாரதா நம்பி ஆரூரனுக்கும், பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர்.மாரிமுத்துவுக்கும் வழங்கப்படுகிறது.
பாரதியார் விருது பெற கவிஞர் செளந்தரா கைலசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முனைவர் த.பெரியாண்டவனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது திருச்சி எம்.எஸ்.வெங்கடாசசலத்திற்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் வேழவேந்தனுக்கும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
2007ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு அதற்கென முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நிலைக் குழுக் கூட்டம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் அம்பேத்கர் விருதுக்குரியவர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள கவிஞர் செளந்தரா கைலாசம், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.