சட்டவிரோதமாக யு.எஸ்சில்..ஒபாமா அத்தை-புகலிடம் கிடைக்குமா?
அதிபர் ஒபாமாவின் தந்தையின் ஒன்று விட்ட சகோதரி செய்துனி ஒன்யாங்கோ. கென்யாவைச் சேர்ந்தவர் இவர்.
கென்யாவில் அரசியல் ஸ்திரமின்மை நிலவியதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்தார் ஒன்யாங்கோ. 2001ம் ஆண்டு அவருக்கு அமெரிக்க அரசு சமூக பாதுகாப்பு அட்டையை வழங்கி, அமெரிக்காவில் தங்க அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு அவர் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் இந்தக் கோரிக்கை 2004ம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும் கென்யா திரும்பாமல் தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருந்து வருகிறார் ஒன்யாங்கோ. 2 முறை மீண்டும் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் அமெரிக்க அரசு அதை நிராகரித்தது. இதையடுத்து அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு 2 முறை அவருக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அவர் போகவில்லை.
இதையடுத்து அவர் மீது வழககு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குடியேற்றத் துறை நீதிமன்ற நீதிபதி லியோனார்டு ஷாபிரோ, 2010ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி ஒன்யாங்கோவின் அரசியல் புகலிடம் குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். அதுவரை ஒன்யாங்கோ அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் எனவும் நீதிபதி அனுமதித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாலர் பென் லபோல்ட் கூறுகையில், இந்த விவகாரத்தில் அதிபர் பாரக் ஒபாமா தலையிடாமல் தள்ளியே இருக்கிறார். சட்டப்படி அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்றார்.
தெற்கு பாஸ்டனில் ஒன்யாங்கோ வசித்து வருகிறார். தான் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் சுகாதார ஆலோசகராக அவர் செயல்படுகிறார்.
பாரக் ஒபாமா அதிபராக பதவியேற்ற நிகழ்ச்சிக்கு தனது வக்கீலுடன் சென்று ஒன்யாங்கோ கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.