ஜூன் 21ல் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 17 -வது இந்திய மாங்கனி திருவிழா 21.6.09 அன்று துவங்க உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் அழைக்கப்படுவதும் மாங்கனியே.
உலக அளவில் 63 நாடுகளில் மா பயிரிடப்படுகிறது. உலக உற்பத்தியில் மாங்கனி 53 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டு 7 லட்சம் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடிக்கு சாதகமான மண் மற்றும் சீதோஷ்ண நிலை உள்ளதால் 34 ஆயிரம் எக்டேர் நிலத்தில் மா சாகுபடி செய்யப்படுகிறது. எனவே தான் இதை மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு சுமார் 42 பழக்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 2லட்சம் மெட்ரிக் டன் பழங்களை பயன்படுத்தி 50 ஆயிரம் மெட்ரிக் டன் பழக்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது.
தோத்தாபுரி என்னும் பெங்களூரா, காதர் என்னும் அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, பீதர் என்னும் நடு சாலை, மல்கோவா, ஜகாங்கீர், ஹிமாயுதீன் போன்ற ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.
தமிழகத்திலேயே பெருமளவிற்கு மா உற்பத்தியாகும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 21 -ம் தேதி 17 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியும் மா சாகுபடி கருத்தரங்கும் நடைபெற உள்ளது என்றார்.
மாங்கனி ஏற்றுமதி் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய்க்கு மேலாக அந்நிய செலாவணி கிடைக்கிறது. இதன் மூலம், சுமார் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications