திருச்செந்தூரில் ரூ.123 கோடி செலவில் கும்பாபிஷேக பணி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக பணிகள் ரூ. 123 கோடி செலவில் நடைபெற்று வருவதாக இந்து அறநிலைத்துறை ஆணையர் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் ஜீலை 2ம் தேதி மகா கும்பாஅபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ரூ.123 கோடி ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. இந்த திருப்பணி வேலைகளை ஆய்வு செய்ய தமிழக இந்து அறநிலைத்துறை ஆணையர் சம்பத் திருச்செந்தூர் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரசு பொறுப்பேற்ற தமிழகத்தில் ரூ. 242.91 கோடி செலவில் திருப்பணி வேலைகள் முடிவடைந்து 3500 கோயில்களில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் முடிவுற்ற கோயில்கள் அனைத்தும் முறையாக கண்டறிப்பட்டு கும்பாபிஷகம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜீலை 2ம் தேதி நடக்கிறது.
கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதற்கட்டமாக இங்கு நடக்கும் திருப்பணி வேலைகளை தற்போது ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள மற்ற கோயில்களை விட மிகச்சிறந்த முறையில் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 225 கோயில்களில் தேர்களை செப்பணிட ரூ.10 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. இதில் 114 கோயில்களில் தேர்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.