எல்லைகளற்ற டாக்டர்கள் குழுவின் மருத்துவமனையில் குவியும் காயமடைந்த தமிழர்கள்
வவுனியா: எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற பெயரில் வவுனியாவில் செயல்பட்டு வரும் மருத்துவக் குழுக்கள் பணியாற்றும் மருத்துவமனையில், காயமடைந்த தமிழர்கள் சிகிச்சைக்காக குவிந்தவண்ணம் உள்ளனர்.
பல்வேறு வெளிநாட்டு டாக்டர்கள் இணைந்து, எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற பெயரி்ல் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வவுனியா மாவட்டத்தில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மாணிக் பார்ம் இடம் பெயர்ந்தோர் முகாமுக்கு அருகில் இந்த மருத்துவமனை உள்ளது. இலங்கை சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து இந்த மருத்துவ சேவை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இந்த டாக்டர் குழுக்கள் 5000 பேருக்கு அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அயராமல் சேவை செய்து வருகின்றனர்.
காயமடைந்த புண்களுக்கு கட்டுப் போடுவது, சிறு சிறு ஆபரேஷன்களை செய்வது, பிசியோதெரபி உள்ளிட்டவை இங்கு செய்யப்பட்டு வருகின்றன.
ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள், சிறார்கள் இங்கு அதிக அளவில் வருகின்றனராம். மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, சத்துக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக வருவோர்தான் அதிகம் உள்ளனராம்.
இங்குள்ள படுக்கை வசதியை விட கூடுதலான நோயாளிகள் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கி்நறனர்.
இந்த மருத்துவமனையில் 450 பேர் தங்க படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் சமீப நாட்களில் இங்கு வந்தோரின் எண்ணிக்கை 1200 ஆகும்.
வவுனியாவில் மட்டுமல்லாது பம்பை மடு என்ற இடத்திலும் மருத்துவமனை அமைத்து செயல்பட்டு வருகிறது இந்த எல்லைகளற்ற டாக்டர்கள் குவு.
இந்த டாக்டர்கள் குழுவின் தலைவரான ஹியூக்ஸ் ராபர்ட் கூறுகையில், ஜூன் மாதத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான பேருக்கு நாங்கள் காயங்களுக்கு மருந்து போட்டுள்ம். 1200 பேருக்கு அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளோம். அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களை தொடர்ந்து பராமரித்து வருகிறோம்.
வவுனியாவில் தற்போது 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.
ஏராளமான கர்ப்பிணிப் பெண்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் உள்ளன. சிறார்கள் சத்துக்குறைவால் அவதிப்படுகின்றனர் என்றார்.
இந்த அமைப்பின் அவசர கால நடவடிக்கைகளுக்கான மேனேஜர் மேரி நோயல் ரோட்ரிக் கூறுகையில், பழைய காயங்களுக்கு சிகிச்சை தருவதும், மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகள், தோல் வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதுமே முக்கிய பணியாக உள்ளது.
இடம் பெயர்ந்தோர் முகாமில் இல்லாத மருத்துவ வசதிகளை செய்து தருவதில் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்றார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நடமாட முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பம்பை மடு பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் ஆயுர்வதே சிகிச்சை தரப்படுகிறதாம். அவர்களுக்கு எல்லைகளற்ற டாக்டர்கள் குழு பிசியோ தெரபியும் அளித்து உதவுகிறது. இந்த நோயாளிகளுக்காக வீல் சேர்கள் உள்ளிட்டவை தரப்பட்டுள்ளன.
எல்லைகளற்ற டாக்டர்கள் குழு, கடந்த 2006ம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு முதல் சாவகச்சேரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications