தமிழக எல்லை கோயில்-உரிமை கோரும் ஆந்திரம்
வேலூர்: தமிழக எல்லைப் பகுதியிலுள்ள பழமையான கோயிலுக்கு ஆந்திர மாநிலம் உரிமை கோருவதால் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
ஆந்திரத்திலிருந்து பாலாறு நுழையும் பகுதியில் புல்லூர் கிராமத்தில் உள்ளது கனக நாச்சியம்மன் கோயில். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், அருகிலுள்ள பல கிராமங்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.
குழந்தையில்லாத பெண்கள் பாலாற்றில் குளித்து, இந்தக் கோயிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வருவதால், உண்டியல் வருவாயும் அதிகம்.
இந்நிலையில் கடந்த வாரம் எல்லைப் பகுதி ஆந்திர கிராமங்களைச் சேர்ந்தவர்களும், சில காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் இந்தக் கோயிலுக்கு வந்துள்ளனர்.
இந்தக் கோயில் ஆந்திரத்துக்குச் சொந்தமானது எனவும், கோவிலில் இருந்து தமிழக அதிகாரிகள் அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
மேலும் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறியதால் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, வாணியம்பாடியிலிருந்து போலீஸார் விரைந்து வந்து நிலைமையை சமாளித்தனர்.
இந்தப் பகுதியில் இரு மாநில எல்லைகள் தெளிவாகக் குறிக்கப்படாததே இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications