உலகத் தமிழ் மாநாடு - உலகத் தமிழராய்ச்சி நிறுவன ஒப்புதைலப் பெற அரசு முடிவு
சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் கோவையில் நடைபெறவுள்ள 9வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக விரைவில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் நொபுரு கரசிமாவை தொடர்பு கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் செயலதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து உரிய ஒப்புதலைப் பெற நிறுவனத்தின் துணைத் தலைவரான வி.சி.குழந்தைசாமி ஏற்பாடு செய்வார்.
இதுதொடர்பாக தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு முறைப்படி முதல்வர் கருணாநிதியும் கடிதம் எழுதுள்ளார்.
மேலும், உலகத் தமிழ் மாநாடு தொடர்பான தகவல்கள் அடங்கிய இணையதளமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தி்ல் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் இணைய பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் குழந்தைச்சாமி, முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன், உலகத் தமிழராய்ச்சி நிறுவன பொருளாளர் முத்துக்குமாரசாமி, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், கனிமொழி கருணாநிதி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.