மதுரை நாயக்கர் மஹாலில் தினசரி கலை விழா- சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
மதுரை: மதுரையில் உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் தினசரி கலை, கலாச்சார விழாக்களை நடத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் புகழ் பெற்ற மாசி வீதிகளில் தற்போது வாரம் ஒருமுறை, சனிக்கிழமையன்று, தெருவோரத் திருவிழா என்ற கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள், நாடகங்களை நாயக்கர் மஹாலில் நடத்தினால், அதுவும் தினசரி நடத்தினால் பெருமளவிலான சுறறுலாப் பயணிகளைக் கவர முடியும், நமது நாட்டின் கலாச்சாரத்தை, கலையை அவர்கள் அறிய நல்ல வாய்ப்பாக அமையும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மஹாலில் உள்ள ஒலி, ஒளிக் காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல இந்த கலை நிகழ்ச்சிகளையும் ரெகுலராக நடத்தினால், மேலும் பொலிவு கிடைக்கும், சுற்றுலாத்துறைக்கு நல்ல வருவாயும் கிடைக்கும்.
சுற்றுலாப் பயணிகள் என்றில்லாமல், பொழுதுபோக்கு போக்கிடமே இல்லாமல் தவித்து வரும் மதுரை மக்களுக்கும் இந்த நிகழ்ச்சிகள் நல்ல வடிகாலாக அமையும் என்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் கோரிக்கை.