தமிழக கோவில் திருப்பணிகளுக்கு ரூ.250 கோடி கோரிக்கை
திருவண்ணாமலை: கோவில் திருப்பணிகளுக்காக 13வது நிதி குழுவிடம் ரூ.250 கோடி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள், கோவில் புதிய மடப்பள்ளி கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா 16 கால் மண்டபம் அருகில் நடந்தது.
இதில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், பெளர்ணமிக்கு 5 லட்சம் பக்தர்களும், கார்த்திகை தீபத்தில் 16 லட்சம் பக்தர்களும் இங்கு கிரிவலம் செல்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 12வது நிதி குழுவில் 48 கோவில்களுக்கு திருப்பணிக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
13வது நிதி குழுவினர் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்களிடம் கோவில் திருப்பணிகளுக்காக ரூ.250 கோடி நிதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களில் 4,020 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றார்.