திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலி்ல் இன்று ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. உச்சக்கட்ட நிகழ்ச்சியாக 23ம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது.
திருவிழாவின் 7வது நாளான நேற்று முன்தினம் மாலை தெப்பகுளம் தெரு சந்திப்பில் சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணிக்கு வசந்த மண்டபம் எதிரே உள்ள திருக்கல்யான மண்டபத்தில் மணக்கோலத்தில் திருவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளினர். பின்னர் ஐதீக முறைப்படி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
இன்று முதல் வரும் 28ம் தேதி வரை திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.