கவிஞர் புவியரசுவுக்கு 2வது முறையாக சாகித்ய அகாதமி விருது
ஏற்கெனவே நஜ்ருல் இஸ்லாம் எழுதிய கவிதையை மொழி பெயர்த்ததற்காக புவியரசுவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதற்காக கமல்ஹாஸன் தலைமையில் அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
இப்போது அவர் எழுதியுள்ள கையொப்பம் என்ற கவிதை நூலுக்காக மீண்டும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் கவிஞர் புவியரசு. தமிழ் ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். இப்போது அவருக்கு வயது 79. 80 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவரது மனிதன் என்ற நாடகம் 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பானது.
சினிமாவிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் புவியரசு. கமல்ஹாசனுடன் இணைந்து மருத நாயகம் படத்தில் பணியாற்றினார். பார்த்திபனுடன் ஹவுஸ்புல் படத்துக்காக பணியாற்றியுள்ளார்.
ஷேக்ஸ்பியரின் பல புகழ்பெற்ற படைப்புகளை தமிழில் தந்துள்ளார் புவியரசு. இப்போதும் டாஸ்டாவஸ்கியின் 1200 பக்க நாவலான காம்சோவ் சகோதரர்களை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்.