சென்னையில் பிரமாண்ட புத்தக கண்காட்சி - 30ம் தேதி தொடக்கம்
கிட்டத்தட்ட 360 புத்தக நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது.சொக்கலிங்கம், செயலாளர் ராம லட்சுமணன், பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையில் கடந்த 33 ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 30 ந் தேதி தொடங்கி ஜனவரி 10 ந் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கண்காட்சி நடைபெறும்.
முதல்வர் கருணாநிதி 30ந் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 30 வது புத்தக கண்காட்சி நடந்தபோது, முதல்வர் கருணாநிதி நன்கொடையாக வழங்கிய ரூ.1 கோடி மூலம் கிடைத்த வங்கி வருமானத்தில் அறக்கட்டளை ஒன்று தொடங்கியுள்ளோம்.
இந்த அறக்கட்டளை சார்பில், 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழியும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
தமிழ் எழுத்தாளர்களுக்கு பொற்கிழியையும், பாராட்டு சான்றிதழையும் முதல்வர் கருணாநிதி வழங்கி சிறப்பிக்கிறார். மேலும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவில் 606 அரங்குகளில் 360 நிறுவனங்கள் பங்குகொள்ளும் பிரமாண்ட புத்தக கண்காட்சியாக இது இருக்கும்.
கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களின் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர், சிற்றுண்டி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 12 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறும். தினசரி மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதுதவிர மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகளும், ஓவியப்போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தியும் புத்தகங்கள் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கான நுழைவு கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியின்போது ரத்ததான முகாம், ரத்த சர்க்கரை பரிசோதனை முகாமும் நடைபெறுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த கண்காட்சி நடைபெறும் என்று தெரிவித்தனர்.