நவீன நெற்றிக்கண் ஆசிரியர் கைது - எடிட்டர் கில்டு கண்டனம்
டெல்லி: நவீன நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது செய்யப்பட்டதற்கு எடிட்டர்ஸ் கில்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
மு.க.அழகிரி குறித்தும், காண்டிராக்டர் சுரேஷ் என்பவர் குறித்தும் நவீன நெற்றிக்கண் பத்திரிக்கையில் செய்தி வந்தது. இதையடுத்து மணி பல்வேறு கிரிமினல் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் டெல்லியில் உள்ள எடிட்டர்ஸ் கில்டும் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களைக் கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் தொடர்ந்து கண்டித்து வருகிறது.
அவதூறு செய்தி வெளியிட்டார் என்று கூறி சிறையில் அடைக்கும் செயல் மறைமுகமாக பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கும் செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.