தினக்கூலித் தொழிலாளர் வீட்டுக் குழந்தைகளுக்கு தலைவர்கள் பெயர்கள்

ஏதோ கனவில் நடக்கும் காட்சியோ என்று சந்தேகம் வரலாம். ஆனால் உண்மையான நிகழ்ச்சிதான் இது. இருப்பினும் பெயர்கள் மட்டும்தான் நமக்குத் தெரிந்தவை - இந்த பெயர்களுக்குரியவர்கள் குழந்தைகள் என்பதுதான் புதிய விஷயம்.
உ.பி. மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜாலபூர் நகரைச் சேர்ந்தவர் மித்தாய் லால் (45). இவருடைய மனைவி பெயர் சந்திரசேனா (42). இவருக்கு மொத்தம் 7 குழந்தைகள். ஏழு பேருக்கும் பிரபல அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டியுள்ளார் மித்தாய் லால்.
இப்படி பிரபலமானவர்களின் பெயர்களை சூட்டினால் அவர்களும் நாளைக்கு பெரிய அளவுக்கு வளருவார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார் மித்தாய் லால். தற்போது சந்திரசேனா மறுபடியும் கர்ப்பமாக உள்ளாராம். அந்தக் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் மாயாவதி என பெயர் சூட்டுவார்களாம்.
இதுகுறித்து மித்தாய் லால் கூறுகையில், எனக்கு ஆறு மகன்கள், ஒரு மகள். ஆறு மகன்களுக்கும் பிரபலமான தலைவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளேன். ஒரே மகளுக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டியுள்ளேன். இன்னொரு மகள் பிறந்தால், மாயாவதி என்று பெயரிடுவேன்.
இந்தப் பிரபலமான தலைவர்களின் பெயர்களால் எனது பிள்ளைகளும் நாளை நல்ல நிலைக்கு வருவார்கள். அனைவராலும் அறியப்படுவார்கள் என்கிறார்.
மித்தாய் லால் தம்பதியின் குழந்தைகளிலேயே மூத்தவர் முலாயம் சிங் தான். இவருக்கு 18 வயதாகிறது. இளையவர் பால் தாக்கரே. இவர் பிறந்து ஐந்து மாதங்களே ஆகிறதாம்.
கல்யாண் சிங்க்கு 16 வயதாகிறது. கியானி ஜெயில் சிங்குக்கு 15, ராஜ்நாத் சிங்குக்கு 13, மன்மோகன் சிங்க்கு 5 வயதாகிறது. ஒரே மகள் ஜெயலலிதாவுக்கு 8 வயதாகிறது. ஜெயலலிதாவுக்கு பால் தாக்கரே என்றால் உயிராம்.
தற்போது சந்திரசேனா மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். ஐந்து மாதங்களில் குழந்தை பிறக்கவுள்ளதாம். நிச்சயம் பெண்தான் பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தலித் சமூகத்தில் பிறந்த மாயாவதி பல்வேறு தடங்கல்கள், இடையூறுகளை மீறி சாதனை படைத்தது போல தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தனக்குப் பிறக்கப் போகும் மகளும் வருங்காலத்தில் சாதனை படைத்து பெருமை சேர்ப்பாள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மித்தாய் லால்.
பிள்ளைகளில் மூத்தவரான முலாயம் சிங் படு பொறுப்பாக உள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அக்கம் பக்கத்து சிறார்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதிக்கிறாராம்.
மித்தாய் லாலின் பிள்ளைகளைப் போல அவர்களின் பெயர்களுக்குரிய அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...












Click it and Unblock the Notifications