சித்ரா பவுர்ணமி - தாயார் பாதத்திற்கு செல்ல வனத்துறையினர் திடீர் தடை
களக்காடு: நாளை சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருக்குருங்குடி மலையில் உள்ள தாயார் பாதத்திற்கு செல்ல வனத்துறையினர் திடீர் தடை விதித்துள்ளனர்.
களக்காடு அருகே உள்ள திருக்குருங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் தாயார் பாலம் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பாறையில் பாதம் போன்ற வடிவிலான அமைப்பு உள்ளது.
திருக்குருங்குடி மலையில் சித்தர்கள் இன்றும் வாழ்வதாக கருதப்படுகிறது. அவர்கள் இந்த பாதத்திற்கு பூஜைகள் செய்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்கு செல்ல காட்டுக்குள் ஓற்றையடி பாதை மட்டுமே உள்ளது.
ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று சென்னை, திருச்சி மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் இங்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் நாளை 28ம் தேதி சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படும் நிலையில் தாயார் பாதத்திற்கு செல்ல வனத்துறை திடீர் தடை விதித்துள்ளது. இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் பத்ரசாமி கூறுகையில், வனத்தின் நலன் கருதியும், வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும் சென்னை தலைமை வன பாதுகாவலர் உத்தரவுபடி தாயார் பாதத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் தற்போது நீரோடைகள் காய்ந்து வறட்சி ஏற்பட்டுள்ளதும் தடை விதிப்பதற்கு ஒரு காரணமாகும். கொடுமுடியாறு அணை பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமியார் பாதத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுளளது என்றார்.












Click it and Unblock the Notifications