கன்னியாகுமரி காளிமலை கோயிலில் ஒரு லட்சம் பொங்கல் வழிபாடு
குலசேகரம்: காளிமலையில் இன்று சித்திரை பவுர்ணமி தினத்தில் ஒரு லட்சம் பொங்கல் வழிபாடு நடக்கிறது.
கன்னியாகுமரி, மண்டைக்காடு, கொல்லங்கோடு, காளிமலை ஆகிய நான்கு சக்தி தலங்களில் ஓன்றாக திகழ்கிறது காளிமலை. காளிமலை, கொண்டைகட்டி, கூனிச்சி, வரும்பொதி ஆகிய மூன்று மலைகள் ஒருங்கே அமையப்பெற்ற இந்த புண்ணிய மலையில் தூர்க்கா தேவி, தர்மசாஸ்தா, நாகயக்ஷி எழுந்தருளி அருள் பலிக்கின்றனர்.
அகஸ்திய முனிவர் தவம் செய்து மூம்மூர்த்திகளின் தரிசனம் கிடைத்த பெருமை இந்த மலைக்கு உண்டு. மார்த்தாண்ட வர்மராஜா எட்டு வீட்டு பிள்ளைமார்களால் துரத்தப்பட்ட போது இந்த மலையில் அருள் பாலிக்கும் காளிதேவி அருளால் காப்பாற்றப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
வாழ்வளிக்க வரம்பொதி சாஸ்தாவும், துயர்துடைக்க காளிதேவியும், இன்பமளிக்க நாகராஜாவும், தாங்கி நிற்க நெடுத்தனையும், வரமருள கொண்டைக்கட்டி சிவனும், எல்லை தேவதைகளும், தேவ விருட்சங்களும் நிறைந்த தெய்வீக மலையில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
காளிதீர்த்தத்தில் நீராடி வழிபடும் பக்தர்கள் துயர்துடைத்து மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கடல் மட்டத்தில் இருந்து 200 அடிக்கு மேல் மலையில் ஒரு லட்சம் பொங்கல் படைத்து சாதனை படைக்கிறது காளிமலை கோயில். இன்று காலை நிர்மல்யம், அலங்காரபூஜை, அஷ்டதிரவிய மஹா கணபதி ஹோமம், உஷ பூஜை, எதிர்த்த பூஜை, நடந்தது. காலை 9.30 மணிக்கு கூட்டு பொங்கல் தொடர்ந்து, பொங்கல் நிவேத்யம், உச்சகால பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.