திருப்பதி பிறம்மோற்சவம் நிறைவு பெற்றது-சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
திருமலை : திருப்பதி வெங்கடாலசபதி கோவிலில் நடந்த பிரம்மோற்சவ நிகழ்ச்சி கோலாகலமாக முடவடைந்தது.
கடந்த 11ம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில் மலையப்பசாமி மாட வீதிகளில் திருவீதி உலா வந்தார். கருட சேவை நிகழ்ச்சிதான் இதில் பிரதானமானது. அதை 3 லட்சம் பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
நேற்று காலை திருமலையில் தேரோட்ட வைபவம் நடந்தேறியது. இதையும் லட்சக்கணக்கானோர் கண்டு வழிபட்டனர். இரவு குதிரை வாகனத்தில் ஏழுமலையான் பவனிவந்தார்.
பிரம்மோற்சவ விழா நிறைவு நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மாடவீதிகளில் பெருமாள்- தாயார் பல்லக்கு உற்சவம் நடந்தது.
காலை 6 மணிக்கு வராக சுவாமி கோவிலில் மண்டபத்தில் உள்ள தெப்பத்தில் திருமஞ்சனம் நடந்தது. இதை தொடர்ந்து சக்ர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தான தலைவர் சத்திய நாராயணா தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணா ராவ், இணை செயல் அதிகாரி பாஸ்கர் கலந்து கொண்டனர்.
இரவு 9 மணிக்கு பிரம்மோற்சவ நிறைவு நிகழ்ச்சியான கொடி இறக்கம் நடைபெற்றது.
அக்டோபர் மாதம் 8ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அது அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறும்.
உண்டியல் மூலம் ரூ. 11 கோடி வசூல்:
பிரம்மோற்சவ நாட்களில் மொத்தம் 5 லட்சம் பக்தர்கள் ஏழுமலையான தரிசித்துச் சென்றுள்ளனர்.
உண்டியல் வசூலும் ஏகமாக நடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் திருப்பதி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.43 கோடி வருவாய் கிடைத்தது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணாராவ் கூறுகையில், பிரம்மோற்சவம் நடந்த 8 நாட்களில் பக்தர்கள் ரூ.11 கோடியே 53 லட்சம் காணிக்கை செலுத்தினார்கள்.
ஆர்ஜித சேவைகள் மூலம் ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 872 கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் மூலம் ரூ.2 கோடியே 36 லட்சத்து 72 ஆயிரத்து 290 வருவாய் கிடைத்துள்ளது. மொத்தம் ரூ.13 கோடியே 93 லட்சத்து 59 ஆயிரத்து 162 வருமானம் கிடைத்துள்ளது.
5 லட்சத்து 26 ஆயிரத்து 392 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 2 லட்சத்து 40 ஆயிரத்து 832 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.