சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு எடுத்துக்காட்டு-குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று

இதற்கான சான்றினை நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வேரிடஸ் தரச்சான்று நிறுவன இயக்குநர் ஆர்.கே. ஷர்மாவிடம் இருந்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் உதவியாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ் பெற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் மழை நீர் சேகரித்தல், சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரித்தல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஐ.எஸ்.ஓ. 14001:2004 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பதவி ஏற்ற ஒரு வருடத்தில் ரோஷினி என்ற திட்டத்தை பிரதிபா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இத் திட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் மழை நீர் சேகரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, மரம் வளர்த்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மாசுகளைக் கட்டுப்படுத்துதல், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துதல், சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்தல், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துதல், பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், மாளிகை புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இது குறித்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறுகையில்,
நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்த நிதியும ஒதுக்காமல் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்த மாளிகையின் ஊழியர்களையும், அங்கு குடியிருப்பவர்களையும் நான் பாராட்டுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications