துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சித்திரைத் திருவிழா
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.16.04.2010 வெள்ளிக்கிழமை மாலை இந்தியா கிளப் தர்பார் ஹாலில் வெகு விமரிசையாக இது கொண்டாடப்பட்டது.
சௌம்யா சுந்தர்ராமன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். பொதுச்செயலாளர் காயத்ரி சந்திரசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். அஞ்சனா ஹரிதாஸ் தமிழ்ப் பாடல் பாடினார்.
தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் தலைவர் மீனாகுமாரி பத்மநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் தனது தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவின் சார்பில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி சித்திரைத் திருவிழாகும். வழமைபோல் அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
தமிழ்ப் பெண்கள் சங்கம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டு இன்று வரை பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்டார். மேலும் இந்திய கன்சலேட் ஆதரவில் செயல்படும் இந்திய சமூக நலச்சங்கத்தில் உறுப்பினராக இருந்து பொதுமன்னிப்பு, மருத்துவமுகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இணைத்துக் கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் காயத்ரி சந்திரசேகர், பொருளாளர் உஷா கிருஷ்ணன், பொழுதுபோக்குத்துறை செயலாளர் சாரதா ஹரி, கமிட்டி உறுப்பினர்கள் ராதா தியாகராஜன், ஹேமமாலினி சுந்தர், ஆலோசகர்கள் மீனாட்சி காந்தி, சுஜாதா சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையத்தளத்தை (www.tladubai.webs.com) ஆலோசகர் மீனாட்சி காந்தி அறிமுகம் செய்து வைத்தார். இதனை உருவாக்கிய மீரா ஸ்ரீகாந்திற்கு பாராட்டும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இது ஐ.பி.எல். சீசன். இதேபோல் புத்தாண்டு ஐ.பி.எல். என தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்கு, கன்னட, பஞ்சாபி, மலையாள, மராத்திய புத்தாண்டு என அனைத்துப் புத்தாண்டுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் தத்ரூபமாக விளக்கிக் கூறப்பட்டது.
ஃபேன்ஸி டிரஸ் போட்டியில் குழந்தைகள் பலர் பங்கேற்றனர். கரகாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், பாவைக்கூத்து, கும்மியாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்கள் நிகழ்வில் இடம்பெற்றன.
மாணவ, மாணவியர் திருக்குறளை அதன் பொருளுடன் குறள் சொல்லும் நேரம் எனும் நிகழ்வின் மூலம் வழங்கினர். புவனேஸ்வரி ரத்தினம், மீனாகுமாரி பத்மநாதன், ஈஸ்வர், சுஜாதா விஸ்வநாதன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை மீனாட்சி காந்தி மற்றும் மீனாகுமாரி பத்மநாதன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு உதவி புரிந்த யுஏஇ எக்ஸ்ஜேஞ்ச் நிறுவனத்தின் மேத்யூக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
காயத்ரி சந்திரசேகர் நன்றி கூறினார். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியினை நித்யா விவேக் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் தமிழ்க்குடும்பத்தினர் பலர் பங்கேற்றனர்.