மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம்-காரைக்கால் போராட்டக் குழு
காரைக்கால்: காரைக்கால் பகுதி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை16 சதவீதமாக குறைத்த புதுச்சேரி அரசைக் கண்டித்து அனைத்து மாணவர்களையும் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப் போவதாக காரைக்கால் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
காரைக்காலை தனியாகப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கக் கோரி காரைக்கால் போராட்டக் குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய போராட்டத்தை அது அறிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், காரைக்கால் பகுதி மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு 18 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வந்தது. தற்போது இதை 16 சதவீதமாக குறைத்துள்ளனர்.
இது காரைககால் பகுதி மக்களுக்கு புதுச்சேரி அரசு செய்துள்ள மாபெரும் துரோகமாகும். இந்த துரோகத்தைக் கண்டித்து, இதை ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது.