பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை: பச்சைப் பட்டுடுத்தி ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார் கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் இதைக்கண்டு கோவிந்தா கோஷம் முழங்கி அழகரை வழிபட்டனர்.
தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண வரும் அழகர் பெருமான், தான் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுவதால் கோபம் கொண்டு மதுரைக்குள் வராமல் ஆற்றோரமாகவே திரும்பிச் சென்று விடுவதாக ஐதீகம்.
அதன்படி நேற்று மதுரைக்கு வந்த கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குழுமி இருக்க இன்று அதிகாலை தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் பெருமான் புறப்பட்டார். கருப்பண்ணசாமி கோவிலில் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் வைகை ஆற்றுக்கு வந்தார் அழகர். காலை 7.05 மணியளவில் வைகை ஆற்றில் அழகர் இறங்கினார்.
பச்சைப் பட்டுடுத்தி இன்று அழகர் ஆற்றில் இறங்கினார். பச்சைப் பட்டு உடுத்தியிருந்ததால், இந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்தோங்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆற்றில் இறங்கிய அழகர் பெருமான் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கோவிந்தா கோஷமிட்டும் பக்தர்கள் அழகரை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications