தமிழக சட்ட மேலவை..ஒரு வரலாற்று பார்வை!
1965ம் ஆண்டில் சட்டமன்றத் தொகுதி வரையறைக்குப்பின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 என நிர்ணயிக்கப்பட்டது. மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 ஆகக் குறைக்கப்பட்டது.
1986ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் சட்டசபை, மேலவை ஆகியவை மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தன.
ஆனால், 1986ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் மேலவை திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 14-5-1986ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் மக்களவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
மேலவை ககலைக்கப்பட்டபோது அதன் தலைவராக 'சிலம்புச்செல்வர்' ம.பொ.சிவஞானம் இருந்தார். மேலவை எதிர்க் கட்சித் தலைவராக மு.கருணாநிதி இருந்தார்.
1989ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொண்டார் முதல்வர் கருணாநிதி.
இதற்கான தீர்மானம் 1989ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி ராஜ்யசபாவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதை நிறைவேற்றித் தர அப்போதைய பிரதமர் வி.பி.சிங் எடுத்த பல முயற்சிகளும் பலனனிக்கவில்லை.
இந் 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி-சந்திரசேகர் கூட்டணியால் திமுக அரசு கலைக்கப்பட்டது. ராஜிவ்-ஜெயலலிதா அமைத்த கூட்டணி வென்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. உடனே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மேலவைக்கான தீர்மானத்தை ரத்து செய்யும் ஒரு தீர்மானம் சட்டசபையி்ல் நிறைவேற்றப்பட்டது.
1996ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்து. ஆனால், அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில் தான் இப்போது மீண்டும் மேலவையைக் கொண்டு வர புயல் வேகத்தல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது திமுக அரசு.
இதற்கான தீர்மானம் கடந்த மாதம் 12ம் தேதி தமிழகத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அன்றே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் நெருக்குதலால் மத்திய அரசு இதை நாடாளுமனறத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியும் விட்டது.
அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. அவரது ஒப்புதலும் மிக விரைவிலேயே கிடைக்கும் என்று தெரிகிறது.
இதையடுத்து 78 உறுப்பினர்கள் கொண்ட புதிய மேலவையை அமைக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த 78 பேரில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், 12ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 12ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவகர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படுவர்.