துபாய் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் கவிஞர் பிறைசூடன்: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்
விழா குத்துவிளக்கு ஏற்றி துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமீரக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை ஸ்வேதா, அம்ருதா, ரோஷினி ஆகியோர் பாடினர். இன்று ஒரு தகவலாக உழவர் தினம் குறித்து அம்ருதா கிரீவாசன் தகவல் வழங்கினார்.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை தாங்கினார். இலக்கிய நயமிகு உரைவழங்க காரணமான கவிஞர் பிறைசூடனைப் பாராட்டினார். பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்புக்களைப் பாராட்டினார். குழந்தைகளின் அற்புத நடன நிகழ்வு தனது மனதினைக் கொள்ளை கொள்வதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் கவிஞர் பிறைசூடன் பேருரை நிகழ்த்தினார். அப்போது அவர் துபாய் தமிழ்ச் சங்கம் தமிழனின் பெருமையை நிலைநாட்டும் விதமாக கலை, கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருவதை பெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்திய சமூக நல அமைப்பின் நிர்வாகி கே. குமார், துபாய் தமிழ்ச்சங்க நிறுவனப் புரவலர் லியாக்கத் அலி, ஆலியா முஹம்மது டிரேடிங் நிர்வாக இயக்குநர் ஷேக் தாவூத், ஸ்டார் சர்வதேசப் பள்ளியின் மேலாளர் மர்யம் ஸலாஹுத்தீன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
மழலையர் பாடல், ராகம் தாளம் பல்லவி, சிறுமியர் நடனம், கோலாட்டம், பொங்கல் பற்றிய கலந்துரையாடல், முளைப்பாரி நடனம், பாரதியார் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்வினை மீரா கிரிவாசன் மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பெண்களுக்காக சிறப்புக் குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல் உள்ளிட்ட பொங்கல் வகைகள் இரவு உணவாக வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications