Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோன்புத் திருநாளின் பெருமைகள்

Subscribe to Oneindia Tamil

Ramzan
'ஈத்" என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

ஐவகை கடமைகள்

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் இஸ்லாமியராக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(ரமலான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.

இறைதூதர் அளித்த நாள்

முகம்மது நபி அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை கேட்டபோது, பண்டைய காலம் தொட்டு விளையாடுவதற்காகவும். பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது முகம்மது நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவ்விரண்டு திருவிழாக்களுக்கும் பதிலாக சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளார். அவை குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!, மற்றொன்று ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்! என்று அறிவித்தார்கள்.

நோன்பின் மகிமை

ஒன்றும் இல்லாமல் பட்டினி கிடப்பது வேறு. பசியின் கொடுமையை உணரவேண்டும் என்பதற்காகவும், அகந்தை, ஆணவத்தை ஒடுக்கி சிறந்த மனிதராக உயரவேண்டும் என்பதற்காகவுமே ஒருமாத காலம் பசியோடு நோன்பிருக்கின்றனர் இஸ்லாமியர்கள். இது ஒவ்வொரு இஸ்லாமியரின் தலையாய கடமை என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளே ஈகைத் திருநாள். ஒரு மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை ரமலான் மாதத்தின் கடைசி நாளுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என இறைவனால் வழங்கபட்ட திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

தானத்தினால் ஏற்படும் இன்பம்

"ஈதல்' என்பது ஒருவகை இன்பமாகும். அந்த இன்பத்தை உணராதவர்தாம், தம்முடைய செல்வத்தை இழந்து நிற்கும் கொடிய நெஞ்சமுடையோராவர் என்பதையே வள்ளுவர்

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்." என்று கூறியுள்ளார். இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதால் பெறுபவரும், வழங்குபவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி கொள்ள வழிகோலும்.

ஈகை கொடுத்தல்

பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி ஸல் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

"மனித நேயம்" என்பதற்கு, ஈகைப்பண்பும் இரக்கச் சிந்தையுமே சிறந்த சான்றுகளாகும். ரமலான் மாதத்தில் நோற்ற நோன்புக்கு ஷவ்வால் முதல் நாள் அன்று விடுமுறை. அன்று நோன்பிருப்பது நபி வழியன்று! மனம் விரும்பிய உணவை ரசித்து சாப்பிட்டு, குடும்பத்தார், உற்றார், உறவினருடன் மகிழ்ந்திருத்தல் அன்றைய நிகழ்வாகும்.

ஈகையின் கடமை

தாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் வேண்டிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் ஈதுல் ஃபித்ர் அல்லது ஈகைப்பெருநாள் என அழைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+