ஐ.நா.சபையின் இனப் பாகுபாடுகள் களையும் குழுவுக்கு இந்தியா மீண்டும் தேர்வு
நியூயார்க்: ஐ.நா.சபையின் இனப் பாகுபாடுகளை களையும் குழுவுக்கு இந்திய பிரதிநிதி திலீப் லாஹிரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்க, ஐக்கிய நாடுகள் சபையில் கண்காணிப்புக் குழு செயல்படுகிறது. இந்த குழுவில் கடந்த வாரம் இந்தியாவும் உறுப்பினராக இணைத்து கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஐ.நா.சபையின் இன பாகுபாடுகளை களையும் சி.இ.ஆர்.டி குழுவில் இந்திய பிரதிநிதி திலீப் லாஹிரி கடந்த 2008ம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் 2012ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அந்த பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் உள்ள 167 ஓட்டுகளில் திலீப் லாஹிரிக்கு 147 ஓட்டுகள் கிடைத்தது. இதனையடுத்து திலீப் லாஹிரி அதே பதவியில் வரும் ஜனவரி 19ம் தேதியில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு இருப்பார்.
திலீப் லாஹிரி ஏற்கனவே பெரு, பொலிவியா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியவர். மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.