உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும் – இது வள்ளுவர் வாக்கு.
“ அவசரத்தில் ஒருவரை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவரை சந்தேகிப்பதும் தீராத துயரத்தைத் தரும்." என்று நண்பர்களை தேர்ந்தெடுப்பது குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.
நட்பு என்பது முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவதே நட்பு. காலில் முள் குத்தினால் கண்கள் கலங்குவதைப்போல நமக்கு ஒரு துன்பம் என்றால் கூடவே தானும் கலங்குபவனே உண்மையான நண்பன்.
நம்முடைய நட்பு வட்டம் எத்தகையது என்று தெரிந்து கொள்ள எளிதாக பனைமரம், தென்னைமரம், வாழைமரம் என்று நண்பர்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர் முன்னோர்கள்.
பனைமரம்
பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தை தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்கு கிடைத்த தண்ணீரை குடித்து தானகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்கு தருகிறது. இதுபோல நம்மிடம் எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன்.
தென்னை மரம்
தென்னை மரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்கு பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன் தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.
வாழைமரம்
வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றி கவனித்தால்தான் நமக்குப்பலன் தருகிறது. அதுபோல தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.
இந்த மூவரில் பனைமரம் போன்ற நண்பனைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நட்பின் வலிமையை உணர்த்தும் வகையில் புராணத்தில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. நல்ல நட்பு அமைவது என்பது இறைவன் கொடுக்கும் வரமாகும்.












Click it and Unblock the Notifications