குற்றாலத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழக 3 நாள் மாநாடு: 30-ம் தேதி துவக்கம்
திருநெல்வேலி: இஸ்லாமிய இலக்கிய கழகத்தில் 3-வது மாநில மாநாடு மற்றும் படைப்பிலக்கிய கருத்தரங்கு வரும் 30-ம் தேதி குற்றாலத்தில் துவங்குகிறது. இது வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கவிருககிறது.
இது குறித்து இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் அப்துல் ரகுமான் நிருபர்களிடம் கூறியதாவது:
இஸ்லாமிய இலக்கிய கழக மூன்றாம் மாநில மாநாடு படைப்பிலக்கிய கருத்தரங்கு குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு தலைவர் இதாயத்துல்லா தலைமை வகிக்கிறார். டாக்டர் ஹிமானா சையத் மாநாட்டை துவக்கி வைக்கிறார். பத்ஹூர் ரப்பானி சாகிப், கேப்டன் அமீர் அலி, அப்துல் ரகுமான், கமால் முன்னிலை வகிக்கின்றனர்.
முதல் நாளான 30-ம் தேதி படைப்பிலக்கிய பயிலரங்கில் தமிழ் செல்வன், எழுத்தாளர்கள் ஆர்னிகா நாசர், இஸ்ஹாக், பேராசிரியர் நுமான், ஹாமீம் முஸ்தபா, அப்துல் காதர், 2-ம் நாளான் அக்டோபர் 1-ம் தேதி நடக்கும் பயிலரங்கில் நாகூர் ரூமி, எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், பீர் முகம்மது, தோப்பில் முகம்மது மீரான், இருகூரான், ரோஜா குமார், தாழை மதியவன், களந்தை பீர் முகம்மது, மீரா மைதீன், அர்ஷியா, கீரனூர் ஜாகிர் ராஜா, பிர்தௌஸ் ராஜகுமாரன், பிரபஞ்சன், அப்துல் ரகுமான் ஆகியோரும் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். மொத்தம் 12 அமர்வுகளாக இந்நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மூன்றாம் நாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று தென்காசி இசக்கி திருமண மண்டபத்தில் நடக்கும் இஸ்லாமிய இலக்கிய கழக மூன்றாம் மாநில மாநாட்டிற்கு கேப்டன் அமீர் அலி தலைமை வகிக்கிறார். கருத்தரங்கில் பேராசிரியர் தொ.பரமசிவம், எழுத்தாளர் பிரபஞ்சன், அப்துல் காதர், பர்வீன் சுல்தானா, சிலம்பொலி செல்லப்பனார் பங்கேற்கின்றனர்.
அன்று மதியம் நடக்கும் கவியரங்கில் எழுதுகோல் என்ற தலைப்பில் இக்பால் தலைமையில் தேங்கை ஷர்புதீன் மிஸ்பாஹி, தக்கலை ஹலீமா, அபு ஹாஷிமா, திட்டச்சேரி அன்வர்தீன், காஜா கனி, காதல் மதி, முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாலையில் ஹிதாயத்துல்லா தலைமையில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் எம். பி. அப்துல் ரகுமான், முகம்மது பஷீர், ஜஹாங்கீர் உட்பட பலர் பேசுகின்றனர். தோப்பில் முகம்மது மீரான், கமால், பீர் முகம்மது, ரமீஷ் அப்துல்லா ஆகியோருக்கு பத்ஹூர் ரப்பானி சாகிப் இலக்கிய சுடர் விருதுகள் வழங்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications