ஜெயகாந்தன் நாவலின் தெலுங்கு மொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாதெமி விருது : 23 நாவல்கள் தேர்வு
டெல்லி: மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கு விருது கிடைத்துள்ளது.
சாகித்ய அகாதெமி செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அதற்கு சுனில் கங்கோபாத்யாய் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதுகளுக்கான பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில் 2004 முதல் 2008ம் ஆண்டுவரையில் தமிழ் உள்பட 23 மொழிகளில் வெளியான தலா ஒரு புத்தகத்துக்கு மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவலை சி. பாலாஜி தெலுங்கில் மொழி பெயர்த்தார். அந்த நாவல் தெலுங்கில் கல்யாணி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதற்கு தெலுங்கு மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது.
இதே போன்று தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'உமர்: செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்ற நாவலுக்கு கிடைத்துள்ளது.
மலையாள எழுத்தாளர் நூரநாடு ஹனீப் எழுதிய செங்கோல் இல்லாதே கிரீடம் இல்லாதே என்ற நாவலை நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்தார்.
சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது பெறுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கமும், பட்டயமும் வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடக்கவிருக்கும் சிறப்பு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.